அன்புமணி, சைலேந்திரபாபு உட்பட 16,000 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம்... சென்னையில்!
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், போலீஸ் அதிகாரி சைலேந்திரபாபு உட்பட சுமார் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
விப்ரோ மற்றும் சென்னை ரன்னர்ஸ் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சென்னை மாரத்தான் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான 4-வது சென்னை மராத்தான் பந்தயம் இன்று நடந்தது.
இதில், 42.2 கிலோ மீட்டர் தூரத்துக்கான முழு மராத்தான், 21.1 கிலோ மீட்டர் தூரத்துக்கான அரை மாரத்தான், 10 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகிய 3 பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது.
முழு மாரத்தான்...
முழு மராத்தான் ஓட்டம் அதிகாலை 4 மணிக்கு கஸ்தூரிபாய் ரயில் நிலையம் அருகே இருந்து தொடங்கியது. அதேபோல், அரை மாரத்தான் 4.30 மணிக்கும், 10 கி.மீட்டர் தூரத்துக்கான ஓட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து காலை 7 மணிக்கும் தொடங்கியது.
16 ஆயிரம் பேர்...
3 பிரிவுகளில் நடந்த இந்த மாரத்தான் ஓட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், போலீஸ் அதிகாரி சைலேந்திரபாபு உட்பட சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாதை...
மத்திய கைலாஷ், அடையாறு பாலம், எம்.ஆர்.சி. நகர், சாந்தோம், மெரீனா, போர் நினைவு சின்னம் பாதைகளில் நடந்த மராத்தான் ஓட்டப்பந்தயம், சி.பி.டி. மைதானத்தில் முடிவடைந்தது.
ஆண்கள் பிரிவில்...
இந்தப் பந்தயத்தில் முழு மராத்தான் ஆண்கள் பிரிவில் பந்தய தூரத்தை 2 மணி 35 நிமிட நேரத்தில் கடந்து ஜெகதீசன் வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து வரவ நாதன் 2 மணி 41 நிமிடங்களில் கடந்து 2-வது இடத்தையும், நாகேஷ் பவார் 2 மணி 44 நிமிடத்தில் கடந்து 3-வது இடத்தையும் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில்...
இதேபோல், முழு மராத்தான் பெண்கள் பிரிவில் சைலஜா ஸ்ரீதர் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 3 மணி 49 நிமிட நேரத்தில் ஓடி கடந்தார். ஹெலினா 3 மணி 54 நிமிட நேரத்திலும், சினேகா 4 மணி 20 நிமிட நேரத்திலும் கடந்து முறையே 2-வது, 3-வது இடங்களை பிடித்தனர்.
ரூ. 15 லட்சம் பரிசு...
இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மொத்தம் 36 பேருக்கு இந்தப் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. முழு மாரத்தானில் வெற்றி பெற்ற வீரருக்கு ரூ.1 லட்சமும், வீராங்கனைக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது.
முதல் 5 இடங்கள்...
இதே போல அரை மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரமும், 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.35 ஆயிரமும் வழங்கப்பட்டது. முதல் 5 இடங்கள் வரை பரிசு வழங்கப்பட்டது.
வயதானவர்களுக்கும் பரிசு...
இதேபோல் இந்த போட்டியில் பங்கேற்று முதல் 3 இடங்களை பிடித்த 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
எண்ணிக்கை உயர்வு...
கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் 6500 பேரும், 2013-ல் 10 ஆயிரம் பேரும், 2014-ல் 12,500 பேரும் பங்கேற்றனர். தற்போது இந்த எண்ணிக்கை 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.