கஞ்சா போதைக்கு மட்டுமல்ல... நோய்க்கும் மருந்தாகும்!
போதைக்காக உபயோகிக்கப்படும் கஞ்சா செடியில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார்.
சென்னை: கஞ்சா விற்பனை செய்வது, உபயோகிப்பது சட்டப்படி குற்றம். கஞ்சா வைத்திருந்தால் உடனடி கைதுதான்.
தற்போது கஞ்சாவை மருந்து பொருளாக சட்டப்படி விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார். கஞ்சாவின் மருத்துவ பயன்களை அறிந்து கொள்வோம்.
அண்மைக்கால ஆய்வுகள் கஞ்சா தாவரத்தில் காணப்படும் செயல் ஊக்கப் பொருட்களைப் பிரித்தெடுத்துள்ளன. இவை வாந்தியை தடுக்கக் கூடியது. வேதி மருத்துவம் பெறும் புற்றுநோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. மேலும் தண்டுவட பாதிப்பு, கால்வலிப்பு, தொடர்வலிகள் மற்றும் பசியின்மைக்கும் சிறந்த மருந்தாகிறது.
இந்தியாவில் கி.மு. 800 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்கிறது. இன்றைக்கு அதிக அளவில் போதை வஸ்துவாக மட்டுமே பயன்படுத்தப்படுவதால் இது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் விதை மற்றும் தண்டு நார்களுக்காகவும், கள்ளத்தனமாக கஞ்சாவிற்காகவும் தற்போது மலைப்பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
அறுவை சிகிச்சை மருந்து
பண்டைய எகிப்தில் கண் வீக்கம் போக்கவும், கருப்பையினை குளிர வைக்கவும், கஞ்சா பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் இலைகளின் வடிசாறு அல்லது இலைகளை வலிபோக்கும் மருந்தாக அறுவை சிகிச்சையின் பொழுது பயன்படுத்தினர்.
வலி நிவாரணி
19ஆம் நூற்றாண்டில் தீவிர ஆய்வுகளுக்குப் பின்னர் வலி போக்கும் மருந்தாக பரவலாக சிபாரிசு செய்யப்பட்டது. விக்டோரியா மகாராணி வலி நிவாரணியாக இத்தாவரத்தினை பயன்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது.
மூன்றுவகை மருந்துகள்
பாங், கஞ்சா, சரஸ் போன்ற மூன்று வகையான மருந்துகள் இத்தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
உலர்த்தப்பட்ட இலைகள் பாங் எனப்படும். இது கரும்பச்சை வண்ணத்தில் காணப்படும். பெண் தாவரங்களின் மலர்கள் அல்லது கனிகள் கொண்ட பிசின் அகற்றப்படாத நுனிப்பகுதிகள் கஞ்சா எனப்படும். இது குறிப்பிட்ட வாசனை கொண்டது.
பசியை தூண்டும்
பாங் மற்றும் கஞ்சா பசியை தூண்டுகிறது. நரம்பு செயல்களையும் தூண்டுகிறது. இது மலமிளக்கியாகவும் தரப்படுகின்றன. இலைகளை கசக்கி அதிலிருந்து பெறப்பட்ட பிசின் போன்ற பொருளே சரஸ் எனப்படும். இது கரும்பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.
மனநோய்க்கு மருந்து
மனமாறாட்டம், மனநோய், ஆகியவற்றிர்க்கு மருந்தாக சரஸ் சிபாரிசு செய்யப்படுகிறது. இது ஆஸ்துமா, டெட்டனஸ் போன்ற நோய்களுக்கு மருந்தாகிறது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கிறது. மனச்சோர்வு போக்கும். தூக்கத்தை தூண்டுவதாக இது பயன்படுகிறது.
மலச்சிக்கலை போக்குகிறது
இலைகளின் சாறு பூச்சிகளை அழிக்கின்றது. விதைகள் சிறந்த மலமிளக்கி. குறிப்பாக முதியவர்களின் மலச்சிக்கலை போக்க வல்லது. இத்தாவரம் கிளாக்கொமா, உயர் ரத்த அழுத்தம், போக்க பயன்படுகிறது. தாவரத்தின் கசாயம் இரத்த வயிற்றுப்போக்கினைத் தடுக்கிறது.
புற்றுநோய்க்கு மருந்தாகும் கஞ்சா
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் நோய்க்கு மருந்தாக கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே வரிசையில் இந்தியாவிலும் கஞ்சாவை மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். குறிப்பாக புற்றுநோய் குணப்படுத்துவதில் கஞ்சா முக்கிய பங்கு வகிக்கிறது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் மேனகா காந்தி.