காணும் பொங்கலன்று மெரினா பீச்சில் குளிக்க முடியாதாங்க
சென்னை: பொங்கல் பண்டிகையின் 4 நாள் கொண்டாட்டத்தில் போகியும், பொங்கல் வழிபாடும் நிறைவடைந்துள்ளது.
3வது நாளான இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பில் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் நிறைவு நாள் கொண்டாட்டமாக நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நாளில், நாளை சென்னை மக்கள் லட்சக்கணக்கில் குடும்பத்தோடு காணும் பொங்கலை கொண்டாட கடற்கரை பகுதிகளுக்கு படையெடுப்பார்கள்.
அண்ணா நினைவிடத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை கடற்கரை மணல் பகுதியில் மக்கள் திரண்டுவிடுவார்கள். காணும் பொங்கல் தினத்தில் உற்சாக மிகுதியில் சிலர் கடலுக்குள் சென்று குளிப்பதும், விளையாடுவதும் எல்லை மீறி செல்வதால் விபரீதமாகிறது.
காணும் பொங்கலுக்கு மெரினாவில் மக்கள் கடலுக்குள் இறங்குவதை தடுக்க போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தலைமையில் நடந்த போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் காணும் பொங்கல் அன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மெரினாவில் கல்லுக்குட்டை முதல் கலங்கரை விளக்கம் வரை சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுளன.
போலீசாரின் தடையை மீறி அத்துமீறும் இளைஞர்கள் மீது நடவடிக்கையில் இறங்கவும் தயாராக இருப்பார்கள். உழைப்பாளர் சிலைக்கு பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 கட்டுப்பாட்டு அறைகள் காணாமல் போகும் குழந்தைகளை மீட்டு ஒப்படைப்பதற்காக செயல்படுகிறது. உழைப்பாளர் சிலையில் இருந்து மெரினா பகுதிக்கு செல்ல ஒரு வழியும், வெளியே வருவதற்கு ஒரு வழியும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.