ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் எதிரொலி- மெரினாவில் போலீஸ் தடை
ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடைபெறுவதையொட்டி சென்னை மெரினாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : ஜாக்டோ - ஜியோ அரசு ஊழியர்கள் அமைப்பின் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், சென்னை மெரினாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
7வது ஊதியக் குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற ஐந்து அம்க்ச கோரிக்கைகளை வலியுறுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ இன்று கோட்டை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து இருந்தது.
இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல ஊழியர்கள் நேற்று இரவு முதல் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று காலை முதல் சென்னை வாலாஜா சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலையில் கோட்டையை நோக்கி போராட்டத்தை துவங்கினர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து வருகின்றனர்.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கோட்டைக்கு வரும் மெரினா சாலையை போராட்டக்காரர்கள் தடுக்கக்கூடும் என்பதால் அங்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மெரினாவிற்கு செல்லவும், மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.