தமிழக கடலோரத்தைக் காக்க கமாண்டோக்கள்.. சைலேந்திர பாபு
சென்னை: தமிழக கடலோரத்தை தீவிரவாதிகளிடமிருந்து காப்பதற்காக பல்வேறு விதமான ஏற்பாடுகளை கடலோரக் காவல் படை செய்துள்ளதாக கடலோரக் காவல்படையின் கூடுல் டிஜிபியான சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணா நகர் டவர் பூங்காவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளான கல்லூரி மாணவியர் கலந்து கொண்டார். அவர்களிடையே சைலந்திரபாபு பேசினார். அப்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேச்சை அவர் நிகழ்த்தினார்.
சென்னை இலக்கிய சங்கம், பபாசி எனப்படும் தி புக்செல்லர்ஸ் அண்ட் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் ஆப் சவுத் இந்தியா மற்றும் சென்னை புக் கிளப் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின.
பின்னர் செய்தியாளர்களிடம் கடலோரக் காவல் குறித்து அவர் பேசுகையில்,
தமிழக கடலோர பகுதி மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது. தமிழக கடற்பகுதி ஆயிரத்து 76 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதில், மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது. ரோந்து பணிக்காக கடலோர காவல் படையில் உள்ள 24 அதிவேக படகுகளை பயன்படுத்தி வருகிறோம்.
ரோந்து பணியை பொறுத்தவரை கடல் பகுதி மட்டும் அல்லாமல், கரை பகுதியிலும் மேற்கொண்டு வருகிறோம். இதற்காக மரைன் ஹோம் கார்டு என்ற பெயரில் சுமார் 500 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 1093 என்ற இலவச உதவி தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் ஏதேனும் நடந்தாலோ இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
மேலும், கடலோரத்தை ஒட்டியுள்ள சுமார் 591 கிராம மக்களுக்கு, பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 12 கடலோர காவல் நிலையங்கள் மட்டுமே உள்ளன. அவற்றை அதிகமாக்கும் வகையில் மேலும் 30 காவல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு அமையும் பட்சத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு 20 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு கடலோர காவல் நிலையம் அமைந்துவிடும்.
இது தவிர, மரைன் கமாண்டோ படை என்ற பெயரில் அனைத்து விதமான பயிற்சிகளையும் பெற்ற வீரர்கள் கடலோர காவல்படையில் உள்ளனர். அவர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியான ஆபரேஷன் ஆம்லா சென்ற ஆண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு அது நடத்தப்படும் என்றார் சைலேந்திரபாபு.