கடலில் தவிக்கும் மீனவர்களைக் காக்க சென்னையிலிருந்து பறந்து வருவார்கள் கமாண்டோக்கள்!
தூத்துக்குடி: ஆபத்து காலங்களில் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை பாதுகாத்திட கடலோர போலீஸாருக்கு கமோண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறினார்.
தமிழக மரைன் காவல்துறையில் 20 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு கமோண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், பாரா சீலிங், மோட்டாரிங், வேவ் சர்ச்சிங், மாரத்தான், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி வான்தீவு பகுதியில் கமோண்டோ வீரர்களின் நீச்சல் பயிற்சி தொடர்பான சோதனை நிகழ்வு இன்று நடந்தது. இப்பயிற்சியை தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி.,சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டு கமோண்டோ வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, புதிய கமோண்டோ வீரர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கமோண்டோக்கள் தற்போது வான்தீவு வரையில் சுமார் 10மீட்டர் ஆழத்திற்கு சென்று நீந்தி சென்று பயிற்சி பெற்றுள்ளனர். வரும் நாட்களில் இவர்கள் குறைந்தது 30மீட்டர் முதல் 40மீட்டர் ஆழம் வரை நீந்தி சென்று நடுக்கடலில் ஆபத்தில் சிக்கும் மீனவர்களை மீட்டு வருவதற்கான பயிற்சி அளிக்கப்படும்.
இந்த கமோண்டோ வீரர்களுக்கு கப்பல்துறை மூலமாக தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. நடுக்கடலில் ஆபத்து காலங்களில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்பது மற்றும் சந்தேகப்படும்படியாக கடல் பகுதிகளில் திரியும் நபர்களை கண்டறிந்து கைது செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள்.
இந்த கமோண்டோ வீரர்கள் அனைவரும் சென்னையில் இருப்பார்கள். மீனவர்களை மீட்பது தொடர்பாக 1093க்கு தகவல் கொடுத்தால் வீரர்கள் சம்பந்தபட்ட இடத்திற்கு விமானம், ஹெலிகாப்டர் மூலமாக விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொள்வார்கள்.
மரைன் போலீசார் இதுவரை கடலில் சிக்கிய 132மீனவர்களையும், 34படகுகளையும் மீட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் வனத்துறையினருடன் இணைந்து தீவு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலமாக தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை பிடிப்பது தடுக்கப்பட்டு வருகிறது.
வரும் நாட்களில் தமிழக கடற்பகுதிகளில் 25கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு மரைன் காவல்நிலையம் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.