சதீஷ்குமார் மரணம்: என்னை சிக்க வைத்து பணம் பறிக்க முயற்சி.. 'பாராலிம்பிக்' மாரியப்பன் குற்றச்சாட்டு!
சதீஷ்குமார் விவகாரத்தில் தன்னை சிக்க வைத்து சிலர் பணம் பறிக்க முயற்சி செய்வதாக பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஓமலூர்: சதீஷ்குமார் விவகாரத்தில் தன்னை சிக்க வைத்து சிலர் பணம் பறிக்க முயற்சி செய்வதாக பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் குற்றம்சாட்டியுள்ளார். சதீஷ்குமார் மரணத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் புகாருக்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் மாரியப்பன். இதைத்தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் சார்பில் அவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரியப்பன் தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சதீஷ்குமார் என்ற இளைஞரின் பைக் மாரியப்பனின் கார் மீது மோதியது.
சடலமாக சதீஷ்
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே, புதரில் சதீஷ்குமார் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
மாரியப்பன் மீது புகார்
சதீஷ்குமாரின் உயிரிழப்புக்கு மாரியப்பன்தான் காரணம் என சதீஷ்குமாரின் உறவினர்கள் தீவட்டிப்பட்டி போலீஸில் புகார் அளித்துள்ளனர். மாரியப்பன் மிரட்டியதால் தான் சதீஷ்குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
புகாருக்கு மாரியப்பன் மறுப்பு
இந்நிலையில் ஓமலூரை அடுத்த பெரியவடகம்பட்டியில் மாரியப்பன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளத்தார். அப்போது சதீஷ்குமார் மரணத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் புகாருக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
பணம் பறிக்க முயற்சி
சதீஷ்குமார் விவகாரத்தில் தன்னை சிக்கவைத்து பணம் பறிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். சதிஷ்குமார் தற்கொலை விவகாரத்தை வைத்து சிலர் தன்மீது அவதூறு பரப்புவதாகவும் மாரியப்பன் கூறினார்.
எந்த தொடர்பும் இல்லை
குடிபோதையில் சதீஷ்குமார் தனது பைக்கில் மோதியதாக கூறிய மாரியப்பன், இதனால் தனது கார் சேதமடைந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து சதீஷ்குமாரின் பெற்றோரிடம் கூறியதாகவும் மாரியப்பன் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். மற்றபடி சதீஷ்கமார் மரணத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மாரியப்பன் கூறினார்.