சென்னை வந்தார் 'தங்கமகன்' மாரியப்பன்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு !
சென்னை: ரியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் இன்று மாலை சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரேசில் நாட்டில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ரியோ பாராலிம்பிக் போட்டியில் 159 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 4,352 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 19 வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் உள்பட 4 பதக்கம் கிடைத்தது.
இந்தப் போட்டியில் சேலம் அருகே உள்ள பெரிய வடுகம்பட்டியைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் வருண்சிங் வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தேவேந்திரா தங்கமும், பெண்களுக்கான குண்டு எறிதலில் தீபா மாலிக் வெள்ளி பதக்கமும் பெற்றனர். பாரா ஒலிம்பிக் நிறைவு விழாவில் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி சென்றார்.
இதையடுத்து நேற்று டெல்லி வந்த வீரர்கள் அனைவரும் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துபெற்றனர். இந்நிலையில் டெல்லியில் இருந்து இன்று மாலை சென்னை வந்தடைந்தார் மாரியப்பன். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் மாஃபாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மாரியப்பனை வரவேற்றனர்.