சுதந்திர இந்தியாவின் சாதனை நாயகர்கள்.. "தங்க மகன்" மாரியப்பன் தங்கவேலு!
மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாட்டின் தங்கம். இந்திய சுதந்திர தினத்தின் 71வது ஆண்டு கொண்டாடப்படும் இந்த நன்நாளில் சாதனை நாயகன் தங்கமகனை நினைவு கூர்வதில் பெருமை கொள்வோம்.
சென்னை: சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்பதை நிரூபித்து இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுத்து பெருமை சேர்த்தவர் தங்கமகன் மாரியப்பன்.
சேலம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி குக்கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு. ரியோடி ஜெனிரோவில் நடந்த பாரலிம்பிக் போட்டியில் பங்கேற்று ஒற்றைக் காலின் வலிமையில் அனாயாசமாக உயரத்தைத் தாண்டி தங்கப்பதக்கம் வென்று அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.
மாரியப்பன் தங்கவேலு
சேலத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பெரியவடுகம்பட்டி மாரியப்பனின் சொந்த ஊர். இவரது பெற்றேர் தங்கவேல் - சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
எதிர்பாராத விபத்து
5 வயதில் ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்வதற்காக சாலையோரம் சென்று கொண்டிருந்த மாரியப்பன் மீதுஅந்த வழியாக வந்த லாரி, மாரியப்பன் மீது மோத, மாரியப்பனின் வலது கால் நசுங்கியது கூழானது.
தளராத மாரியப்பன்
கால் இல்லை என்பதற்காக மாரியப்பன் முடங்கிவிட வில்லை. உயரம் தாண்டுதலில் முழு மூச்சில் ஈடுபட்டார். பள்ளி பருவத்தில் மாரியப்பனின் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார்.
சாதனை நாயகன்
மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாரியப்பன். கடந்த 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்தார்.
பயிற்சியாளர் ஊக்கம்
2013ல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் தாண்டிய விதம், கோச் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போகவே அன்று முதல், மாரியப்பனுக்கு சிறப்பு பயிற்சி அளித்து கவனித்து வருகிறார். பெங்களூருவில் வைத்து முழு மூச்சாக பயிற்சி கொடுத்தார். இதன் விளைவாக, துனிஸியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் 1.78 மீ., உயரம் தாண்டி, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தார்.
தங்கம் வென்ற மாரியப்பன்
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். அவர் 1.89 மீட்டர் உயரம் தாண்டி அசத்தினார்.
அர்ஜூனா விருது
தங்கம் வென்ற மாரியப்பனை நாடே பாராட்டியது. பிரதமர், குடியரசுத்தலைவர், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்தி பரிசுகளை அளித்தனர். இந்த நிலையில் மத்திய அரசு மாரியப்பன் தங்கவேலுவிற்கு அர்ஜூனா விருது அறிவித்துள்ளது.
நினைவு கூர்வதில் பெருமை
சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்று நிரூபித்து தடைக்கற்களை படிக்கற்கலாக மாற்றி இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்து பெருமை சேர்த்தவர் தங்கமகன் மாரியப்பன். அவரது சாதனை இந்திய இளைய தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டு. 21 வயதில் சாதித்த தங்கமகனை இந்திய சுதந்திர தினத்தில் நினைவு கூர்வதில் பெருமை கொள்வோம்