சௌமியா கொலை வழக்கு தீர்ப்பை விமர்ச்சித்த மார்க்கண்டேய கட்ஜூ - சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்
சௌமியா பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை விமர்ச்சித்த ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உச்சநீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார்
சென்னை : கேரளாவில் கடந்த 2011ம் ஆண்டு, ஓடும் ரயிலில் இருந்து சவுமியா என்ற இளம் பெண்ணை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்து பின்னர், கொலை செய்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 7 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் மாற்றுத்திறனாளி என்பதால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதனை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கடுமையாக விமர்சித்திருந்தார். சவுமியா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கியுள்ளது. அவசர, அவசரமாக விசாரித்து தவறான தீர்ப்பு வழங்கி விட்டது. எனவே, இதனை மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், அவருக்கு எதிராக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், கட்ஜூ நேரில் வந்து ஆஜராகி விவாதிக்க தயாரா என நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கட்ஜூ, சவுமியா கொலை வழக்கு தண்டனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நான் ஆஜராக தயார். இது தொடர்பாக திறந்த விவாதம் நடத்தவும் தயாராக உள்ளேன். ஆனால் முன்னாள் நீதிபதிகள் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்காட அனுமதியில்லை என சட்டம் தெரிவிக்கிறது. இதை நீதிபதிகள் ரத்து செய்தால் விசாரணைக்கு ஆஜராக தயார் என்று பதிவிட்டார்.
தவறு செய்வது மனித இயல்பு, முக்கிய வழக்குகளில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகளும் மனிதர்கள் தான் என்பதை உணர வேண்டும்.தவறு செய்வது தவறல்ல. ஆனால் செய்தது தவறு என தெரிந்த பின் அதை திருத்திக்கொள்ள வேண்டும். நானும் சில வழக்குகளில் தவறான தீர்ப்பளித்துள்ளேன் அதை எண்ணி பல முறை வருத்தப்பட்டுள்ளேன் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சௌமியா வழக்கு தொடர்பாக விவாதிக்க இன்று கட்ஜூ உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.