மயிலாப்பூர் நட்ராஜை முதல்வராக்குங்கள்.. மார்க்கண்டேய கட்ஜு அதிரடி!
அதிமுக எம்.எல்.ஏக்கள் முன்னாள் போலீஸ் அதிகாரியும் மயிலாப்பூர் எம்.எல்.ஏவுமான நடராஜை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் நேர்மையான போலீஸ் அதிகாரியான எந்த அணியிலும் இடம்பெறாத எம்.எல்.ஏ. நடராஜை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. முதல்வர் பதவிக்கான நாற்காலியில் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மல்லுக்கட்டி நிற்கின்றனர். ஆனால் ஆளுநர் வித்யாசகர் ராவோ எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருந்து வருகிறார்.
இதனிடையே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழக முதல்வராக யார் வரவேண்டும்? என்ற தலைப்பில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ளதாவது:
தமிழக அரசியல் குறித்து எதுவும் எழுதிவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஏனெனில் என்னுடைய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்ற அச்சம்தான்.
ஆனால் என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழர்கள் பலரும் நாங்கள் தவறாக புரிந்து கொள்ளமாட்டோம்.. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன்.
பழனிச்சாமி(எடப்பாடி) சசிகலா கும்பலைச் சேர்ந்தவர். பன்னீர்செல்வத்துக்கு போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை... அவரும் சசிகலாவின் கும்பலில் இருந்தவர்தான். பன்னீர்செல்வம் மீதும் புகார்கள் உள்ளன. அந்த புகார்கள் ஏற்புடையதா? நேர்மையானதா? என்பதற்கு அப்பால் தம்மை ஒரு புனிதராக காட்டிக் கொள்ளும் திடீர் நாடகத்தை பன்னீர்செல்வம் அரங்கேற்றி வருகிறார். ஆகையால் இந்த 2 பேருமே வேண்டாம் என கருதுகிறேன்.
இந்த சூழ்நிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆர். நடராஜை முதல்வர் பதவிக்கான நபராக நான் மீண்டும் பரிந்துரைக்கிறேன். இதற்கு முன்னரும் என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளேன்.
டாக்டர் நடராஜ் மிகவும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக செயல்பட்டவர்; தம்முடைய தொகுதியில் நல்ல பணிகளை செய்திருக்கிறார். நடுநிலையானவர். சசிகலா அல்லது பன்னீர்செல்வம் அணிகளில் இடம்பெறாதவர். நான் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நடராஜ் பணியாற்றினார்.
அடையாறு தியாசபிகல் சொசைட்டி வளாகத்தில் காலை நடைபயிற்சியின் போது நாங்கள் சந்திப்பது வழக்கம். அவர் மிகவும் நேர்மையான அதிகாரி. தற்போதைய நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழகம் வளர்ச்சி அடைவதற்கு தகுதியான நபராக டாக்டர் நடராஜை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு கட்ஜூ கூறியுள்ளார்.