ஆரியர்கள் மட்டுமல்ல, திராவிடர்களும் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள்தான்: கட்ஜு சர்ச்சை பேச்சு
சென்னை: ஆரியர்களும், திராவிடர்களும் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள்தான். இந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள் என்பவர்கள் பழங்குடியினர் மட்டுமே என்று சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பரபரப்பாக பேசியுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அசோக்குமாரை, நிரந்தர நீதிபதியாக நியமிப்பதில் அரசியல் தலையீடு இருந்தது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ.
இந்நிலையில் சென்னையிலுள்ள வர்த்தக மையத்தில், தனியார் அமைப்பு சார்பில் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நேற்று நடத்தப்பட்டது.
இந்த கருத்தரங்கில் பங்கேற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பேசியதாவது:
சமஸ்கிருதம் மொழி, பிற மொழிகளை எல்லாம் அழிக்கும் மொழி என்று கூறுவதை ஏற்க முடியாது. சமஸ்கிருதம் மொழி, அறிவியல் ரீதியான கட்டமைப்புகளை கொண்ட மொழியாகும்.
இந்தியாவுக்குள் ஆரியர்கள் வந்து குடியேறினார்கள் என்று கூறுகின்றனர். ஆனால், ஆரியர் வருவதற்கு முன்பு திராவிடர்கள் இங்கு குடியேறினார்கள். இதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளது. எனவே, ஆரியர்களும், திராவிடர்களும் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள்தான்.
இவர்கள் குடியேறுவதற்கு முன்பு, வனப்பகுதியில் பூர்வீக குடிமக்களான பழங்குடியினர் மட்டுமே வாழ்ந்தனர். இந்த பழங்குடியினர்தான், இந்தியாவின் பூர்வீக குடிமக்களாவார்கள்.
தற்போது இந்து-முஸ்லிம் பிரச்சினை என்பது நம் நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் இந்த பிரச்சினை இருந்தது வருகிறது. இந்த பிரச்சினையால்தான், நாடு முன்னேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
120 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக முடியவில்லை. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஏழ்மை நாடு என்று பிறநாட்டினர் கருதுவதால், இந்த நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.