போதுமப்பா உங்க சகவாசம்.. தமிழர்களுக்கு குட்பை.. மார்க்கண்டேய கட்ஜு அதிரடி முடிவு!
Recommended Video
சென்னை: தமிழர்கள் தன்னை தொடர்ந்து அவதூறாக விமர்சித்து வருவதால் இனிமேல் தமிழர்கள் குறித்து எந்தப் பதிவும் போடப் போவதில்லை என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் முகநூல் பதிவுகள் மிகவும் பிரபலமானவை. நாட்டு நடப்புகள் குறித்து விறுப்பு வெறுப்பில்லாமல் அவர் போடும் பதிவுகளைப் படிக்க தனி ரசிகர் கூட்டமே உண்டு.
குறிப்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் புரட்சி வெடித்தபோது அவர் போட்ட தொடர் பதிவுகளால் தமிழர்கள் மத்தியில் உயர்ந்து நின்றார். நானும் தமிழனே என்றும் அவர் உணர்ச்சிகரமாக அறிவித்தார். அந்த அளவுக்கு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் புரட்சி அவரை ஈர்த்தது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுக் குரல்
தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். பல ஆலோசனைகளையும் கூறி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் போட்ட ஒரு பதிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது. ஜெயலலிதா மரணம் மற்றும் கருணாநிதி மரணம் குறித்து அவர் பதிவு போட்டிருந்தார். அதில் ஜெயலலிதா, கருணாநிதிக்காக ஏன் தமிழக மக்கள் அழுகிறார்கள். கருணாநிதியின் குடும்பம் குறித்தும் அவர்கள் சேர்த்த சொத்துக்கள் குறித்தும் கவலைப்பட வேண்டும். காமராஜர் மரணித்தபோது அவரிடம் சொத்து எதுவும் இல்லை. எத்தனை முரண்பாடு என்று கூறியிருந்தார்.
கட்ஜுவின் சலசலப்புப் பதிவு
கட்ஜுவின் இந்த பதிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. பலரும் கட்ஜுவின் பதிவில் வந்து கடும் கண்டனங்களைக் குவிக்க ஆரம்பித்து விட்டனர். இது பின்னர் கட்ஜூவை ஜாதி ரீதியாக விமர்சிக்கும் அளவுக்குப் போய் விட்டது. இந்த நிலையில் கட்ஜு போட்ட இன்னொரு பதிவில், நான் கருணாநிதியின் சொத்துக்கள் குறித்துத்தானே கேட்டேன். அதற்கு ஏன் தமிழர்கள் கோபப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார்.
கண்டனங்கள் குவிந்தன
இந்தப் பதிவிலும் கண்டனங்கள் குவிந்தன. இதனால் அதிருப்தி அடைந்த கட்ஜு தற்போது புதிய பதிவைப் போட்டுள்ளார். அதில் இனிமேல் தமிழர்கள் குறித்துப் பேசப் போவதில்லை என்று கூறியுள்ளார் கட்ஜு. இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவு:
தமிழர்கள் குறித்து நான் இதுவரை போட்ட அத்தனை பதிவுகளையும் எனது முகநூலிலிருந்து அழித்து விட்டேன். இன ரீதியான விவாதங்கள் தொடரக் கூடாது என நான் விரும்புகிறேன். எனது பதிவுக்கு வந்த நூற்றுக்கணக்கான விமர்சனங்களும் மிகவும் மோசமானவை, ஒரே மாதிரி திரும்பத் திரும்ப விமர்சிக்கிறார்கள்.
எனக்கா ஜாதி வெறி
என்னை ஜாதி வெறி பிடித்தவனாக சித்தரிக்கிறார்கள். எனது வாழ்க்கை முழுவதும் ஜாதியம், மதவாதத்திற்கு எதிராக பேசி, போராடி வந்தவன் நான். நான் என்ன சொன்னேன் என்பதை விளக்கி விட்டேன். நான் சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். நான் தவறே செய்யாதவன் என்று ஒரு போதும் கூறியதில்லை. நானும் தவறு செய்யக் கூடியவன்தான். ஆனால் என்னைப் பற்றிய விமர்சனங்கள் தவறாக இருக்கலாமா?
தமிழர்களுக்காக குரல் கொடுத்தேனே
தமிழர்களின் பல போராட்டங்களில் நான் அவர்களை ஆதரித்து வந்துள்ளேன். ஜல்லிக்கட்டுப் போராட்டம், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்குவது, நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் என நான் பல போராட்டங்களை ஆதரித்துள்ளேன்.
குட்பை
எல்லாவற்றையும் அவர்கள் மறந்து விட்டார்கள். என் மீது மிகவும் மோசமான தாக்குதலைத் தொடுத்து விட்டனர். என்னை ஒரு பார்ப்பண சாத்தானாக சித்தரித்து விட்டனர். எனவே தமிழர்களே குட்பை.. உங்களது விசுவாசத்திற்கு நன்றி என்று கூறியுள்ளார் கட்ஜு.