சென்னை... கொட்டித் தீர்த்த மழையால் வெறிச்சோடிய திருமண மண்டபங்கள்
சென்னை: சென்னையில் இன்று அதிகாலையில் இருந்தே மழை இடை விடாமல் பெய்து வருவதால் முகூர்த்த நாளான இன்று நடைபெற்ற பல்வேறு திருமணங்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் மிஞ்சிய உணவை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொண்டு சென்றனர்.
இன்று முகூர்த்தநாள் என்பதால் சென்னையில் உள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் திருமணங்கள் கோலாகலமாக நடைபெற்றன. திருமணத்துக்கு வருபவர்களுக்காக பல்வேறு உணவு வகைகள் தட புடலாக சமைக்கப்பட்டன. ஆனால் காலையில் இருந்தே மழை இடை விடாமல் பெய்து வருவதால் திருமண மண்டபங்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
தாம்பரம் மாடம்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 500 பேர் மட்டுமே திருமணத்துக்கு வந்ததால் அங்கு தயார் செய்யப்பட்டிருந்த உணவு வகைகள் மீதமாகின.
இதனால் அந்த உணவு வகைகளை ஒரு வேனில் ஏற்றி அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொண்டு சென்று கொடுத்தனர்.
இதுதொடர்பாக திருமண நிகழ்ச்சி ஏற்பட்டாளர் ஒருவர் கூறும்போது, ‘‘சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக பெரும்பாலான திருமண மண்டபங்களில் கூட்டமே இல்லை. இதனால் மீதமான உணவுகள் அனைத்தையும் திருமண வீட்டார் ஆதரவற்ற அனாதை இல்லங்களுக்கு கொடுத்துள்ளனர்'' என்றார்.