செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் மங்கள்யான் விண்கல ஏவுதல் ஒத்திகை
சென்னை: செவ்வாய் கிரகத்திற்கு வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி மங்கள்யான் விண்கலத்தை இந்தியா அனுப்புகிறது. இதற்கான ஒத்திகை இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெறுகிறது.
செவ்வாய் கிரகத்தின் மேற்கூரை மற்றும் அங்கு மீத்தேன் உற்பத்தி ஆகும் இடம் குறித்து ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம் மங்கள்யான் விண்கலத்தை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி விண்ணில் ஏவவிருக்கிறது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும்.
வரும் நவம்பர் 5ம் தேதி மதியம் 2.36 மணிக்கு பிஎஸ்எல்வி சி-25 ராக்கெட் விண்ணில் பாயும். இதற்கான ஒத்திகை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவு தளத்தில் இன்று நடைபெறுகிறது.
மேலும் ராக்கெட் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு துவங்குகிறது. மங்கள்யான் விண்கலம் ரூ.430 கோடி செலவில் பெங்களூரில் செய்யப்பட்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.