சுதந்திர போராட்ட தியாகி ஆம்பூர் கோவிந்தம்மாள் மறைவு.. நேதாஜி படைப்பிரிவில் கேப்டனாக இருந்த வீர மங்கை
தியாகி ஆம்பூர் கோவிந்தாம்மாள் திடீர் என மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91.
வேலூர்: இந்திய தேசிய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றிய தியாகி ஆம்பூர் கோவிந்தம்மாள் வெள்ளிக்கிழமை தனது 91 வயதில் இவ்வுலகைவிட்டு பிரிந்தார்.
வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த முனிசாமி என்பவரது மகள் கோவிந்தம்மாள். இவருக்கு ஒரு வயதாக இருந்த போது, இவரது தந்தை வேலை நிமித்தமாக, குடும்பத்தினருடன், 1927-ல் மலேசியா சென்றார். அங்கு, எட்டாம் வகுப்பு படித்த போது, ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த அருணாசலம் என்பவரை கோவிந்தம்மாள் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், 1943-ல் மலேசியாவில் மலாக்கா பிராந்தா என்ற இடத்தில் நேதாஜி உரையாற்றிய போது, அதை கேட்ட கோவிந்தம்மாள், தான் அணிந்திருந்த, ஆறு பவுன் தங்க நகை, தாய் வீட்டு சீதனமாக கிடைத்த ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தை, ஐ.என்.ஏ., வுக்கு நன்கொடையாக கொடுத்து விட்டு, தனது 16 வயது வயதில் சிப்பாயாக சேர்ந்து, நேதாஜியிடம் போர் பயிற்சி பெற்றார்.
அதன்பின்னர், 1,000 பெண்கள் கொண்ட ஜான்சி ராணி படைப்பிரிவில் கேப்டனாக அவர் பதவி உயர்வு பெற்றார். அப்போது, பல இடங்களில் நடந்த போரில், கோவிந்தம்மாள் தலைமையிலான பெண்கள் படை போரிட்டு வென்றது. நேதாஜி விமான விபத்தில் இறப்பதற்கு, ஒரு நாள் முன்பு, நேதாஜி வீர உரையாற்றிய கூட்டத்தில், கோவிந்தம்மாள் கலந்து கொண்டார்.
ஒரு முறை, பெண்கள் முகாமிற்கு மாறு வேடத்தில் நேதாஜி வந்த போது, அவரை உள்ளே அனுமதிக்க கோவிந்தம்மாள் மறுத்து விட்டார். மேலும், மாறு வேடத்தை கலைத்து தான் யார் என தெரிவித்த பின்னரே நேதாஜியை உள்ளே அனுப்பி அவரது பாராட்டை பெற்றார் கோவிந்தம்மாள். நேதாஜி இறந்த பிறகு, இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்டது.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு, மலேசியாவில் இருந்து சொந்த ஊரான ஆம்பூருக்கு 1949-இல் கணவர் குடும்பத்தினருடன் வந்தார். 1960-ல் அவரது கணவர் அருணாசலம் இறந்தார். அதன் பிறகு கோவிந்தம்மாள் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வந்தார்.
இவருக்கு, நான்கு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மத்திய அரசின் தியாகி பட்டம் பெற்றார். மாநில அரசு வழங்கிய தியாகிகள் பென்சன் மட்டும் பெற்று வந்தார். பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு செய்தும், மத்திய அரசின் மருத்துவ உதவி, இலவச வீட்டுமனை போன்ற உதவிகள் கடைசி அவருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், வறுமையில் வாடிய கோவிந்தம்மாள், வயது முதிர்வு காரணமாக, தனது 91 வயதில் வெள்ளிக்கிழமை மதியம், 3:00 மணிக்கு இவ்வுலகை விட்டு பிரிந்தார்.