தியாகிகள் தினம்: சென்னையில் 2 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட போக்குவரத்து
சென்னை: தியாகிகள் தினத்தையொட்டி, சென்னையில் இன்று இரு நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாண்டு தியாகிகள் தினத்தையொட்டி, ஜனவரி 30ம் தேதி (இன்று) காலை 11 மணி முதல் 11.02 வரை இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை பெருநகரில் போக்குவரத்து இரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. இதேபோல வேறு பல நகரங்களிலும் கூட போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மகாத்மா காந்தியின் நினைவு நாளை ஒட்டி தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று காந்தியின் 71வது நினைவு தினமாகும். இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.