சசிகலாவுடைய முதல் அரசியல் உரையை எழுதி கொடுத்தவர் இவர்தானாமே!
சசிகலாவின் முதல் உரையை நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ்தான் தயாரித்து கொடுத்தார் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை: சசிகலாவின் முதல் உரையை நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ்தான் தயாரித்து கொடுத்தார் என்பது தெரியவந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதுவரை அவரது குரலைக் கேட்காத மக்கள், சசிகலாவின் குரல் எப்படி இருக்கும் என கேட்க ஆர்வமாக இருந்தனர்.
டிசம்பர் 31ஆம் அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா பயன்படுத்தும் நாற்காலியில் அமர்ந்து பொறுப்பேற்றார் சசிகலா. அன்றுதான் அவர் முதல் முறையாக வெளியுலகில் மைக் முன்பு பேசினார்.
அவரது முதல் உரை குறிப்பு மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருந்தது. உருக்கமாக, சசிகலா மீது அனுதாபம் வரும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது அந்த உரை.
உரையை தயாரித்தது யார்?
இதையடுத்து இந்த உரையை யார் தயாரித்திருப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. குழு அமைத்து அந்த உரை தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
முதல் உரையை தயாரித்தவர்
இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சசிகலாவின் முதல் உரையை தயாரித்து கொடுத்தது தான்தான் என்றார்.
ஜெ.வை பார்க்க விடாமல்
மேலும் தினகரன் பெயரில் வந்த 41 அறிக்கைகளை எழுதிக்கொடுத்ததும் தான்தான் என்று கூறினார். மேலும் ஜெயலலிதாவை பார்த்துக்கொண்டதை விட ஜெயலலிதாவை யாரும் பார்க்கவிடாமல் சசிகலா பார்த்துக்கொண்டார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அதிகமாக வசூல் செய்த சசி
நல்ல மருத்துவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க விடாமல் உடன் இருந்தவர்கள் தடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். மேலும் 30 வருடங்களுக்கு மேல் ஜெயலலிதாவை பார்த்துக்கொண்ட சசிகலா, அதற்காக வசூல் செய்தது அதிகம் என்றும் மருது அழகுராஜ் தெரிவித்தார்.