ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பொது தேர்தலுக்கான டிரெய்லர்.. திமுக வெல்லும்: மருதுகணேஷ் Exclusive
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பொதுமக்கள் வெற்றியை எங்களுக்கு வாரி வழங்குவர் என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக பெறும் வெற்றி வருகிற பொதுத் தேர்தலின் முன்னோட்டமாக அமையும் என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட திமுக சார்பில் வேட்பாளர் மருதுகணேஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஒன் இந்தியா தமிழ் தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், முன்பு ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். தற்போது மீண்டும் நானே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன்.
மீண்டும் ஒரு முறை வாய்ப்பு
அப்போது அடைந்த மகிழ்ச்சியை விட தற்போது மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன். திமுகவில் என்னை போன்ற சாதாரண தொண்டனுக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பளித்ததற்கு சந்தோஷமாக உள்ளது. என் வாழ்நாளில் கிடைத்த ஒரு பாக்கியமாக கருதுகிறேன்.
எதிர்மனுதாரருக்கு...
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதற்காக , அதன் தொடர் நடவடிக்கைகள் என்ன என்பதை கேட்டுத்தான் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் எதிர்மனுதாரருக்கு மனு தாக்கல் செய்ய கூறி வரும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ளது.
கட்டுப்பாடுகள் வகுத்துள்ளனர்
இந்நிலையில் தற்போது மீண்டும் ஆர்.கே.நகருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுக மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க மேலும் அதிகப்படியான கட்டுப்பாடுகளை வகுத்து வருவதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மக்கள் மனதில் ஸ்டாலின்
அதை எந்த அளவுக்கு கடைப்பிடிக்க போகிறார்கள் என்பது போக போகத் தான் தெரியும். இதுகுறித்து எங்களது தலைமை கழகம் தடுப்பு நடவடிக்கைகளையும், ஆலோசனைகளையும் வகுத்து தேர்தல் பணியை சிறப்புற செய்வார்கள். திமுக என்பது அசைக்க முடியாத சக்தி. அதிலும் மு.க.ஸ்டாலின் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
திமுக வெல்லும்
எதிர்வரும் தலைமுறைக்கு மு.க.ஸ்டாலின்தான் ஒரு நல்ல விடியல் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தின் அடுத்த முதல்வராகவும் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர். இதற்கு இந்த தேர்தல் ஒரு முன்னோட்டமாகவும் அடுத்து வரவிருக்கும் பொது தேர்தலுக்கு அச்சாரமாகவும் இந்த ஆர்.கே.நகர் தொகுதி வெற்றியை மக்கள் எங்களுக்கு வழங்குவர் என்றார் வேட்பாளர் மருதுகணேஷ்.