முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவு.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: லோக்சபாவின் முன்னாள் சபாநாயகரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை லோக்சபாவில் சபாநாயகராக இருந்தார். பின்னர், கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், 89 வயதான சோம்நாத் சாட்டர்ஜி உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை கொல்கத்தா மருத்துவமனையில் காலமானார்.
சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு, தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "சிறந்த நாடாளுமன்றவாதியும், 10 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி அவர்களது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
சோம்நாத் சாட்டர்ஜி சிறந்த வழக்கறிஞராகவும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளையும் பாதுகாக்கும் போராட்டங்களில் பெரும் பங்காற்றியவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும், சபாநாயகராகவும் பணியாற்றிய போது முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
அவரது மறைவால் வாடும் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது" என்று இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.