8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. திருவண்ணாமலையில் நடை பயணம்.. மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் கைது
8 வழிச்சாலையை எதிர்த்து நடை பயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் போலீஸாரால் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை: 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவண்ணாமலையில் நேற்று தடையை மீறி நடைபயணம் மேற்கொண்டதால் கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்டனர். நேற்று இரவு விடுவிக்கப்பட்ட, மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் நடைபயணம் மேற்கொண்டதால் போலீஸார் அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால், ஆயிரம் ஏக்கருக்கு மேலான காடுகள், விளைநிலங்கள் அழிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். மேலும், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து 'என் நிலம், என் உரிமை' என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை புதன்கிழமை நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்து நடைபயணத்துக்கு தடை விதித்தனர்.
நடைபயணத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடையை மீறி 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான நடைபயணம் நடக்கும் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்யினர் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நேற்று 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து 2000க்கும் மேற்பட்டோர் நடைபயணம் தொடங்கினர். அவர்களை போலீஸார் கைது செய்து இரவு 12 மணிக்கு விடுவித்தனர்.
விடுதலையான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 90 பேர் 8 வழிச்சாலைக்கு எதிரான நடைபயணத்தை மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் திருவண்ணாமலையிலிருந்து மீண்டும் தொடங்கினர். இதனால், போலீஸார் அவரகளைக் கைது செய்து மண்டபத்தில் சிறைவைத்தனர். இதையடுத்து, தடையை மீறி மீண்டும் நடைபயணம் மேற்கொண்டவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.