நிர்மலா தேவி ஆடியோவில் ஆளுநரின் பெயர்: சந்தேகம் கிளப்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
நிர்மலா தேவி ஆடியோவில் ஆளுநரின் பெயர் இடம்பெற்றுள்ளதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவில் ஆளுநரின் பெயர் இடம்பெற்றுள்ளதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
விருதுநகரில் தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் பேராசிரியரின் பேச்சு இளம் பெண்களுடன் அவர் முதல்முறையாகப் பேசுவதாகவோ இந்த இளம் பெண்களிடம் முயற்சிப்பதுதான் முதல் தடவை என்பதாகவோ புரிந்து கொள்ள முடியவில்லை. மிக மிக உயர் பதவிகளில் உள்ளோர், கவர்னர் தாத்தா இல்லை, ஆளுநரை அருகிலிருந்து வீடியோ எடுத்ததாகவும் நிர்மலா தேவி கூறியுள்ளார்.
இதையடுத்து ஆளுநர், அவரது அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித் துறை பல்கலைக்கழக உயரதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுகிறது. நிர்மலா தேவி கருவியாக செயல்பட்டிருக்கிறார். அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் உயர் அரசியல் மற்றும் அதிதார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
தென் மாநில ஆளுநர் ஒருவர் பாலியல் புகார்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், அதுகுறித்து உள்துறை அமைச்சகம் விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், சில வாரங்களுக்கு முன்னர் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இவற்றையெல்லாம் இணைத்து பார்த்தால், "தகுதி , திறமையைத் தாண்டி" முறைகேடான கைமாறுகளுக்காக இவை நடக்கிறதோ என்கிற சந்தேகமும், கவலையும் எழுவது இயல்பே.
நிர்மலா தேவியின் ஆடியோ மற்றும் நியமனங்கள் குறித்த அவருடைய பேச்சுக்கள் குறித்து குற்றவியல் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தன் வழக்காக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும். இத்தகைய விசாரணை முறையாக நடைபெற வேண்டுமென்றால் சந்தேகத்துக்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.