சிஷ்யைகளின் ஆபாச பேச்சு வீடியோவால் சிக்கலில் நித்யானந்தா.. மார்க்சிஸ்ட் அதிரடி தீர்மானம்
Recommended Video
சென்னை: நித்யானந்தா ஆசிரமத்தில் 18 வயது நிரம்பாத குழந்தைகள் ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பது குறித்து விரிவான விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுக் கூட்டம் ஜனவரி 23-25 தேதிகளில் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவு நாளான இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி, மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
காய்கறிகளை தரையில் வீசிய காவல்துறை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் மு. கந்தசாமி கடந்த கடந்த 16-ம் தேதி திருப்புவனம் காவலர்களால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டு ஒருவார காலம் சிகிச்சை பெற்ற பின்பும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. சிறு வியாபாரிகள், விவசாயிகள் பொங்கல் திருநாளையொட்டி சாலையோரத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது காய்கறிகளையும், கூடைகளையும் தரையில் வீசி நாசமாக்கியதோடு திருப்புவனம் காவல்துறையினர் அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதைத் தட்டிக் கேட்டதற்காகவே வன்மத்தோடு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
நடவடிக்கை இல்லை
இந்தத் தாக்குதல் நடந்து 10 நாட்கள் ஆன பின்பும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கண்துடைப்பிற்காக சிலரை ஆயுதப்படைக்கும், அருகில் உள்ள காவல்நிலையங்களுக்கும் பணியிட மாற்றம் செய்துவிட்டதாக காவல்துறையினர் நாடகமாடுகின்றனர். அதிலும் கூட தாக்குதலில் சம்பந்தப்பட்ட துணை ஆய்வாளர் மீண்டும் சட்டம் - ஒழுங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார். காவல்துறையினரின் அத்துமீறல், மனித உரிமை மீறல், மாநிலத்தில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
டிரைவர் பலி
காவலரின் அத்துமீறல் காரணமாக மனமுடைந்து சென்னையில் ஒரு ஓட்டுநர் தீக்குளித்து கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் (சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்). காவல்துறையினர் சிலர் சட்டத்தை மீறி காட்டுமிராண்டித்தனமாக செயல்படும் போது நடவடிக்கை எடுக்க வேண்டிய உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் மவுனம் காப்பது கண்டனத்திற்குரியது. எனவே, காவல்துறையினரும், தமிழக அரசும் உடனடியாக தாக்குதலில் ஈடுபட்ட திருப்புவனம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், உரிய முறையில் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
சாமியார் போர்வை
கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா என்கிற பல குற்ற வழக்குகளில் விசாரணையை எதிர்கொண்டுள்ள சாமியார் என்கிற போர்வையில் செயல்படும் நபரும், அவரது கூட்டத்தினரும் திருவண்ணாமலையின் அடிவாரத்தில் உள்ள பவளக்குன்றில் மூவாயிரம் ஏக்கருக்கும் அதிகமான அரசு நிலத்தையும், வன நிலத்தையும் ஆக்கிரமிக்க முயற்சித்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடுத்து நிறுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த நித்தியானந்தா கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீரபத்திரன் மற்றும் தமுஎகச தலைவர்கள் கருப்பு கருணா, வெண்புறா சரவணன் ஆகியோர் மீது சமூக வலைதளத்தில் மிகவும் தரம் தாழ்ந்த பாலியல் வக்கிரத்துடன் கூடிய தாக்குதலை தொடுத்தது. நித்தியானந்தாவின் அடியாட்களை ஏவி தாக்குதல் முயற்சிகளிலும் ஈடுபட்டது. இது குறித்து கடந்த ஆண்டு காவல்துறையில் புகார் செய்யப்படடது.
வக்கிர வீடியோ
நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் காவல்துறை இயக்குநரிடமும் இது குறித்து முறையீடு செய்யப்பட்டது. இன்று வரையிலும் இவற்றின் மீது எந்த நடவடிக்கையையும் காவல்துறையினர் எடுக்கவில்லை. இந்நிலையில் சமீப காலமாக கருப்பு கருணா, வெண்புறா சரவணன் ஆகியோர் மீதும் அவர்களது குடும்பத்தினரை இணைத்தும் வக்கிரமான வீடியோக்களை வெளியிட்டு அட்டூழியம் செய்து வருகின்றனர். அந்த வீடியோக்களில் பேசுபவர்கள் 18 வயது கூட நிரம்பாத இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காது கூசுகிறது
ஆனால் இத்தகைய குழந்தைகள் பொதுவெளியில் காதால் கேட்க கூசுகிற வார்த்தைகளையும், சொல்லாடல்களையும் பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. அந்த காணொளிகள் பாலியல் வக்கிரத்தோடு அமைந்துள்ளதோடு சம்பந்தப்பட்ட கருப்பு அன்பரசன், வெண்புறா சரவணன், குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சமீப காலமாக நித்தியானந்தா கும்பல் தியானத்திற்கு அழைத்து வந்த ஆண் - பெண் குழந்தைகளை பெற்றோர்களுடன் அனுப்ப மறுப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
நிலங்களை மீட்க வேண்டும்
எனவே காவல்துறை சம்பந்தப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு வயது சோதனை நடத்த வேண்டுமென்றும், அவர்களது பாதுகாப்பு குறித்தும், அவர்கள் அங்கு கொண்டு வரப்பட்ட சூழல் குறித்தும், அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் நித்தியானந்தா கும்பல் கை வசம் உள்ள நிலங்களின் உரிமை குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு
ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்துள்ளார். இதற்கு கண்டனங்கள் எழுந்த பிறகு வெவ்வேறுவிதமான மழுப்பலான பதில்கள் சங்கர மடத் தரப்பிலிருந்து சொல்லப்படுகின்றன. இது ஏற்கத்தக்கதல்ல. மடாதிபதிகளாக இருந்தால் அரசியல் சட்டம், தேசிய சின்னங்கள், மாநில மாண்புகள் இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவர்களாக நடந்து கொள்வதும், அதை நியாயப்படுத்துவதும் சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. விஜயேந்திரரின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.