மாசி மகம் 2018: மயிலாப்பூரில் மகா சண்டியாகம்- மெரீனாவில் தீர்த்தவாரி
மாசி மகம் பௌர்ணமியை முன்னிட்டு மெரீனா கடற்கரையில் கபாலீஸ்வரர், பார்த்தசாரதி பெருமாள் உள்ளிட்ட ஆலயங்களில் உற்சவமூர்த்தியர் தீர்த்தவாரி நடைபெற்றது.
சென்னை: மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோவிலில் மகா சண்டியாகம் நடைபெற்றது. கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மெரீனா கடற்கரையில் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
மாசி மகம். மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.
தீர்த்தமாடும் நாள்
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக் கடலில் இருக்கும் ஆன்மா, இறைவனது அருட்கடலை வேண்டும் நாளே மாசி மகத்தின் சிறப்பாகும். இந்த நாளை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று உமாமகேஸ்வரனை தரிசிப்பார்கள்.
மெரீனாவில் தீர்த்தவாரி
இன்றைய தினம் மாசி மகத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள், கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், விருப்பாக்ஷீஸ்வரர், மல்லீஸ்வரர், அப்பர் சுவாமிகள், வெள்ளீஸ்வரர்,வாலீஸ்வரர் ஆகிய சிவ ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் எழுந்தருளினர்.
கடலாடிய கடவுள்கள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா கடற்கரையில் எழுந்தருளி அருளாசி வழங்கினார். இதனை பார்க்க பக்தர் அதிகளவில் கூடியிருந்தனர். தீர்த்தவாரி நடைபெற்ற பின்னர் ஏராளமானோர் கடலில் நீராடினர்.
மயிலாப்பூரில் சண்டியாகம்
மாசி மகத்தை முன்னிட்டு மயிலாப்பூர் கோலவிழியம்மன் ஆலயத்தில் மகா சண்டி யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும் இந்த மகா சண்டி யாகம் நடைபெற்றது.