ஜிஎஸ்டி வரி எதிரொலி.. நாளை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி: ஜிஎஸ்டி வரியில் தீப்பெட்டி தொழிலுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி நாளை அமலுக்கு வருகிறது. இதில் தீப்பெட்டி தொழிலுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால் தமிழகத்தில் இயங்கும் 300 பகுதி நேர தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பகுதி நேர தீப்பெட்டி தொழிற்சாலைக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரியை 12 சதவீதமாக குறைக்க கோரி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய அரசை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பகுதி நேர தீப்பெட்டி தொழிலுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், இதற்கான முன்னேற்பாடு போராட்டத்தை நாளை தொடங்குவது என முடிவு செய்துள்ளனர்.
வருகிற ஜூலை 3ம் தேதி மாலை கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் பேரணி நடத்துவது, 4ம்தேதி முதல் மத்திய கலால் வரி அலுவலகத்தின் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை தினமும் 250 பேர் பங்கேற்கும் போரட்டத்தை நடத்துவது என தீர்மானித்துள்ளனர். மேலும் வருகிற 10ம் தேதி கோவில்பட்டியில் ரயி்ல் மறியல் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளனர்.