ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு.. ஒரு வாரமாக நடைபெற்ற தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்
கோவில்பட்டி: தீப்பெட்டி மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் உற்பத்தியாளர்கள் நடத்தி வந்த போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுதும் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பில் முழு இயந்திர தீப்பெட்டிக்கும், பகுதி இயந்திர தீப்பெட்டிக்கும் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டாயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் கடந்த 7 நாட்களாக மூடப்பட்டன.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக சாத்தூர், கோவில்பட்டி, ஏழாயிரம்பண்ணைகளில் உள்ள தீப்பெட்டி ஆலைகளில் ஆயிரக்கணக்கான பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் 15 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 7 நாட்களாக தீப்பெட்டி உற்பத்தி தொழில் முற்றிலும் முடங்கிப் போனதால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தீப்பெட்டி ஆலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை முதல் வழக்கம் போல் தீப்பெட்டி ஆலைகள் இயங்கும் எனவும் தீப்பெட்டி பண்டல் விலை 10 சதவீதம் விலை உயரும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.