தடையில்லா சான்றுக்கு இழுத்தடிக்கும் அதிகாரிகள்- மூடப்படும் அபாயத்தில் தீப்பெட்டி ஆலைகள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தீப்பெட்டி மூலப்பொருளுக்க தடையில்லா சான்று வழங்க அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவதால் ஆலைகள் இயங்காமல் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தீப்பெட்டி நிறுவன அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி, விருதுநகர், வேலூர் மாவட்டத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தீப்பெட்டி தொழில் நடந்து வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் இங்கு தயாரிக்கும் தீப்பெட்டிகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இது போல் கென்யா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, ஏமன், வடகொரியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இஙகிருந்து தீப்பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் அரசுக்கு ஏராளமான அன்னிய செலவாணி கிடைக்கிறது. இந்த தொழிலை நம்பி சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
இதில் முக்கால் வாசி பெண்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் தீப்பெட்டி தயாரிப்புக்கு பயன்படும் முக்கிய மூலப்பொருட்களான பொட்டாசியம் குளோரேட், சல்பர் போன்ற வேதிப்பொருட்களை வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதற்கு மாவட்ட வருவாய் அலுவலரிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும்.
கடந்த காலங்களில் தடையில்லா சான்று விண்ணப்பித்த ஓரிரு வாரங்களில் கிடைத்தது. ஆனால் கடந்த ஐந்து வாரங்களாக தடையில்லா சான்று அளவு கூட்டுதல், புதுப்பித்தல் போன்ற பணிகள் சரிவர நடைபெறாததால் தீப்பெட்டி தொழிலுக்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்ய முடியவில்லை. இதனால் தீப்பெட்டி தொழிற்சாலைகள் முடங்கி கிடக்கின்றன.
இதுகுறித்து ஆலை தொழில் அதிபர்கள் கூறுகையில், ஏற்கனவே தீக்குச்சி இறக்குமதி செய்யும்போது பூச்சிமருந்து சான்றிதழ் பெருவதால் சிக்கல் ஏற்படுகிறது. இப்போது தீப்பெட்டி மூலப்பொருட்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் அரசு தலையிட்டு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.