ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மோசமடைந்து வரும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள்
ஜி.எஸ்.டி வரி குறைக்காவிட்டால் தீப்பெட்டி ஆலைகளை மூடப்போவதாக உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
தூத்துக்குடி : ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தீப்பெட்டி தயாரிக்கும் ஆலைகளை மூட அனைத்து தீப்பெட்டி நிறுவன உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், கடலையூர், கழுகுமலை மற்றும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சிறிய மற்றும் பெரிய ஆலைகளும், பகுதி நேர ஆலைகளும் அடங்கும்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு பகுதிநேர தீப்பெட்டி மற்றும் முழுநேர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு ஒரே வரியாக 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது. இது அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும் லாரி வாடகை, தொழிலாளர் கூலி, மூலப்பொருட்கள் விலை உயர்வால் தீப்பெட்டி தொழில் தள்ளாடி வருகிறது.
இதையடுத்து பகுதி நேர தீப்பெட்டி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட முடிவின் அடிப்படையில், அரசு ஜிஎஸ்டி வரியை பல பொருட்களுக்கு குறைத்துள்ளது.
இதிலும் தீப்பெட்டிக்கு தொழிலுக்கு வரிச்சலுகை வழங்கப்படவில்லை. இனி அடுத்து வரும் கவுன்சில் கூட்டத்தில் தீப்பெட்டி தொழிலுக்கு வரி விலக்கு அளிக்காவிட்டால் நிறுவனங்களின் சாவியை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் ஓப்படைக்க தீப்பெட்டி நிறுவன உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பது அதிகாரிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.