ஆல்பட் தியேட்டரில் ரஜினியின் கபாலி பார்த்து 'மகிழ்ச்சி' அடைந்த ஹெய்டன்!
சென்னை: சென்னைக்கு வந்துள்ள பிரபல கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹெய்டன் இன்று ஆல்பட் திரையரங்கில் ரஜினி நடித்த கபாலி படத்தைப் பார்த்தார்.
இந்தப் படம் பார்த்த அனுபவம் மகிழ்ச்சியாய் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் மாத்யூ ஹெய்டன் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளார். கடந்த சில தினங்களாக மதுரை, திருநெல்வேலிக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்து டிஎன்பிஎல் குறித்துப் பேசினார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வேட்டிக் கட்டிக் கொண்டு போய் தரிசித்தார். அப்போதே அவர் கபாலியில் ரஜினி உச்சரிக்கும் மகிழ்ச்சி என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தியதோடு, இந்த வார்த்தை மிகவும் உற்சாகத்தைத் தருவதாகக் குறிப்பிட்டார். தனது ட்விட் ஒன்றிலும் மகிழ்ச்சி என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படும் முன் சென்னைக்கு வந்தார். ரஜினி நடித்த கபாலி படத்தைப் பார்க்க அவர் விரும்பினார். உடனடியாக ஆல்பட் திரையரங்கில் அவருக்கு டிக்கெட் எடுத்துத் தந்து பார்க்க வைத்தனர்.
படம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.