மாட்டுப்பொங்கல் கிராமங்களில் உற்சாக கொண்டாட்டம்- கோவில்களில் நந்திக்கு அபிஷேகம்
பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவான மாட்டுப் பொங்கல், தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரை: பொங்கல் பண்டிகையின் முக்கிய விழாவான மாட்டுப் பொங்கல் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமப் புறங்களில் பொதுமக்கள், மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்தும், மாலைகளை போட்டு அலங்காரங்கள் செய்தும், பூஜைகள் செய்தும் வருகின்றனர்.
உழவுத் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் கால்நடைகளைப் போற்றும் வகையில், மாட்டுப்பொங்கல் கிராமங்களில் உற்சாகமாக மக்கள் கொண்டாடுகின்றனர். இதையொட்டி, வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டியும், மணிகள், கயிறுகள், ஆகியவற்றைக் கொண்டு அலங்கரித்தும் பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை என்ற சோகம் இருந்தாலும் பல கிராமங்களில் மாடுகளை அலங்கரித்து பூஜை செய்தனர். மாடுகளை அவிழ்த்து விட்டு ஓட விட்டனர்.
கால்நடைகளுக்கு மரியாதை
மாடுகளை குளிப்பாட்டியும், அவற்றுக்கு மாலைகள் அணிவித்தும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும், மாட்டுப் பொங்கலையொட்டி, பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவில்களில் பூஜை
சென்னையில் பல்வேறு இடங்களில் வசிப்பவர்கள், மாடுகளை மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்து கடலில் குளிப்பாட்டினர். பின்னர் மாடுகளை அலங்கரித்தும், கோவில்களுக்கு அழைத்துச் சென்றும், பூஜைகள் நடத்தினர். பொங்கல், வாழைப்பழம் ஆகியவைகளை மாடுகளுக்கு கொடுத்தனர்.
கோவில்களில் இருந்த பசுமாடுகளுக்கு கோ பூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நந்திக்கு அபிஷேகம்
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் நூற்றுக்கும்மேற்பட்ட பசுமாடுகளுக்கு கோ பூஜை நடத்தப்பட்டது. மூவாயிரம் கிலோ எடையுள்ள காய்கறிகள், பழங்கள், அனைத்து வகை இனிப்புகள், பூக்களைக் கொண்டு மஹாநந்திக்கு சோடச உபசார சிறப்பு பூஜை நடைபெற்றது.
தஞ்சையில் சிறப்பு அபிஷேகம்
பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாச்சலலேஸ்வரர் திருக்கோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, திருக்கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் கோயில் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, பலூன் மற்றும் மாலை அணிவித்து, நந்தி சிலை அருகே நிறுத்தப்பட்டன. அவற்றை பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். பெரிய நந்தி பகவானுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.