காவிரி கலவரம்: மத்திய அரசைக் கண்டித்து சாஸ்திரி பவனை முற்றுகையிட்டது மே 17 இயக்கம்!
சென்னை: காவிரி வன்முறையை தடுக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மே 17 இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பெங்களூருவில் பெரும் கலவரம் நடைபெற்றது. பெங்களூரே பற்றி எரிந்தது. தமிழர்களின் உடைமைகள் குறித்து வைத்துத் தாக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டும் எந்த வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து மே 17 இயக்கம் சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும், தமிழர்களுக்கு காவிரி மீது உள்ள உரிமையை பறிக்கும் கர்நாடக அரசிற்கு ஆதரவாகவும், அங்கு நடக்கும் இனவெறி தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலும் இந்த முற்றுகை போராட்டம் நடைபெறுவதாக மே 17 இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.