தமிழக அரசின் “தலைமைச் செயலகம்” முற்றுகை.. மே 17 இயக்கம் அறிவிப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையைக் கண்டித்து நாளை தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும் என மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையைக் கண்டித்து நாளை தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும் என மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அனைத்து அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை நடத்தவுள்ளன.
மே 24 ஆம் தேதியான நாளை மாலை3 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தூத்துக்குடியில் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து அமைதி வழியில் தன்னெழுச்சியாக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 12 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலை செய்த தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும், கண்டித்தும்.தமிழக முதல்வரை உடனே பதவி விலக வலியுறுத்தியும்,இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது.
இயக்குனர் பாரதிராஜா. அவர்களின் தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, ஆகியவற்றின் சார்பில் நாளை மாலை 3 மணியளவில், சேப்பாக்கம் அண்ணா சிலையிலிருந்து பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.