பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு எடப்பாடி அரசில் தான் சாவுகள் அதிகம் - திருமுருகன் காந்தி பொளேர் - வீடியோ
சேலம்: டெங்கு மரணம் என்பது அரசின் செயலற்ற தன்மையைத்தான் காட்டுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தான் சாவுகள் அதிகம் என திருமுருகன் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது: ''டெங்கு மரணம் என்பது அரசின் செயலற்ற தன்மையைத்தான் காட்டுகிறது. இந்த நோய் எப்படி பரவும் என்பதற்கான நீண்ட கால ஆய்வுகள் உள்ளன.
இம்மாதிரியான நோய்கள் பரவும் என்று தெரிந்தும் கூட அரசு அதை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு தொடர்ச்சியாக சுகாதாரத்தில் தோல்வி அடைந்து வருகிறது. டெங்கு மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியிலேயே நிறைய டெங்கு மரணங்கள் நடந்துகொண்டு இருக்கிறது. இப்படியான இக்காட்டான சூழ்நிலையில் எந்த அக்கறையும், பொறுப்புணர்வும் அற்ற ஒருவர் முதல்வராக உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சரும் இதனுடன் உடன்பட்டு நிற்கிறார்.
மக்கள் இங்கு கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டுள்ளார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு பொதுமக்கள் அதிகம் இறப்பது இப்போதுதான் நடைபெறுகிறது. காலனியாதிக்க அரசு செய்ததைத்தான் எடப்பாடி பழனிச்சாமி அரசும் செய்து வருகிறது. அதை எதிர்த்து மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்''. - இவ்வாறு அவர் கூறினார்.