நாளை நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம்
மே 17 இயக்கம் சார்பில் நாளை நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை : அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மே 17 இயக்கம் சார்பில் நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எழுச்சிப் பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெறவுள்ளது. இதில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறப்புரை ஆற்ற உள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் தனி நபர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது என்றும், உரிய விசாரணைக்குப் பிறகே கைது செய்ய வேண்டும் என்றும் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு உத்தரவிரட்டது.
இது வன்கொடுமை சட்டத்தை முழுமையாக நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி என்று நாடு முழுவதும் தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் வன்முறையும் நடந்தது.
அதே போல நீட் தேர்வு தகுதியான தமிழக மாணவர்களை மருத்துவப் படிப்பில் சேர விடாமல் வஞ்சிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளதைக் கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து விலக்கு தரக்கோரியும் தமிழகம் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துவருகிறது.
இந்நிலையில், நாளை இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, மே 17 இயக்கம் சார்பில் நாளை மாலை நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எழுச்சிப் பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெறவுள்ளது.
திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, அருள் முருகன், லெனா குமார் மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.