அனிதா தற்கொலை எதிரொலி... மதுரை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது!
அனிதா தற்கொலைக்கு நீதி கோரி மதுரையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை : அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கோரி மதுரையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வில் தோல்வியானதைத் தொடர்ந்து, மாநில கல்வித் திட்டத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மதுரையில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்தோர் மதுரை-சிவகங்கை மெயின்ரோட்டில் மேலமடையில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு-முள்ளு காரணமாக நடுரோட்டில் அமர்ந்து போராடத் தொடங்கினர். இதன் காரணமாக போலீசார் அவர்களைக் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். போராட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.