பதவியாசை இல்லாத ரஜினி நல்லக்கண்ணுவை முதல்வராக்குவாரா?... திருமுருகன் காந்தி 'நறுக்' கேள்வி!
பதவியாசை இல்லாத ரஜினி நல்லக்கண்ணுவை முதல்வராக்குவாரா என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : ஆன்மிக அரசியல் என்றால் என்ன நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு, பசுவின் சிறுநீரை குடித்துக் கொண்டு இருப்பதா. பதவியாசை இல்லை என்று சொல்லும் ரஜினிகாந்த் நல்லக்கண்ணு ஐயாவை முதல்வராக்குவாரா என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜினியின் அரசியல் வருகை குறித்து திருமுருகன் காந்தி காட்டமான கேள்விகளை முன் வைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் : ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பாஜகவின் நெருக்கடியால் நடக்கிறது. பாஜக இந்துத்துவாவை நிலை நிறுத்த முடியாத ஒரு காரணத்தால் தாங்களாகவே வாக்குவங்கியை உருவாக்க முடியாததால் ரஜினி, கமல் போன்றவர்களின் முகமூடிகளை பயன்படுத்தி வாக்குவங்கிகளை உருவாக்க நினைக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் தான் அதற்கான குறியீடுகளை ரஜினி தொடர்ச்சியாக வெளிக்காட்டுகிறார். முதலில் தன்னுடைய மேடையின் பின் திரையில் பாபா முத்திரையின் கீழ் வெள்ளை தாமரை முத்திரையை காட்டினார். அதன் பிறகு ஆன்மிக அரசியல் என்று பேசுவதெல்லாம் அதன் அடிப்படையில் தான்.
பாஜகவின் தூண்டுதல்
பாஜக இங்கு இரண்டாம் தர அரசியலை செய்கிறது, அதற்காக மக்கள் பணி செய்யத் தகுதியற்றவர்களை முன் நிறுத்துகிறது. ரஜினி ஒரு நடிகர் அவரை ரசிக்கலாம், அது வேறு. ரசிகர்களைக் கொண்டு வந்து அரசியலில் நிறுத்தினால் அது எப்படி மக்களுக்கு பயன் அளிக்கும். எந்த அடிப்படையில் ரஜினி மக்களை அணுக நினைக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. 25 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாக சொல்கிறார், இந்த காலகட்டத்தில் ஈழப்போர் நடந்து முடிந்திருக்கிறது, ராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் புயலால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயிருக்கின்றனர்.
என்ன செய்தார் ரஜினி?
விவசாயிகள் போராட்டம், அணுஉலை எதிர்ப்பு போராட்டம் இதில் எல்லாம் அவர் என்ன செய்தார். இதை வைத்து தான் அவர் மக்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். ரஜினி பேசினால் மாற்றம் வரும் என்று இருப்பவர் ஏன் இந்த பிரச்னைகளில் எல்லாம் அமைதியாக இருந்தார் என்பதே என்னுடைய கேள்வி.
தமிழக சிஸ்டம் போல இந்திய சிஸ்டமும் சரியில்லை
ஓராண்டுக்கு முன்பு இருந்ததெல்லாம் தமிழகத்தில் பிரச்னை இல்லையா, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பாராட்டி மோடிக்கு டுவீட் போட்டவர், அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய அரசை எதிர்த்து ஏன் பேசவில்லை. தமிழ்நாட்டு சிஸ்டத்தின் தொடர்ச்சி இந்திய சிஸ்டத்தின் தொடர்ச்சி தானே. இந்திய சிஸ்டம் ஒழுங்காக இருந்திருந்தால் தமிழ்நாட்டு சிஸ்டம் ஒழுங்காக இருந்திருக்கும் அல்லவா.
நல்லக்கண்ணுவை முதல்வராக்குவாரா?
பாஜகவின் பி டீம் தான் ரஜினிகாந்த், ஸ்லீப்பர் செல் கமல் இவர்கள் இரண்டு பேருமே பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்ப மாட்டார்கள். இவர்கள் எப்படி நமக்கு சரியான நிலைப்பாட்டை தந்துவிட முடியும். பதவியாசை இல்லை என்று சொல்லும் ரஜினிகாந்த் நல்லக்கண்ணு ஐயாவை முதல்வராக்குவாரா என்றும் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.