வெல்லப் போவது எந்த சாணக்கியர்?.. சாமியா.. கருணாநிதியா??
சென்னை: சுப்பிரமணியம் சாமியின் டிவீட் சில நாட்களுக்கு முன்பு கிளப்பிய சலசலப்பு இன்னும் கூட அடங்கவில்லை. அவரது டிவீட்டின் உள்ளர்த்தம் குறித்து இன்னும் கூட விவாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் தான் முதலில் போட்ட டிவீட் குறித்து அதிமுக ஆதரவாளர்கள் ஏன் எரிச்சலாக உள்ளனர் என்று கேட்டு இன்னொரு டிவீட் போட்டுள்ளார் சாமி.
குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பதில் சாமி கில்லாடி. அதிலும் தேர்தல் சமயத்தில் தான் சார்ந்த பாஜகவுக்கு ஆதரவாக சூழ்நிலைகளைத் திருப்ப அவர் செய்யாத முயற்சிகளே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் தற்போது அவர் போட்டுள்ள டிவீட்டும்.
இந்த டிவீட்டை சற்று யோசித்துப் பார்த்தால் சாமி உண்மையில் லெப்ட்டில் சிக்னல் போட்டு விட்டு ரைட்டில் போக முயற்சிப்பதை புரிந்து கொள்ளலாம். அதேசமயம், அவரைப் பின் தொடர விரும்புவோரை அவர் சென்டரில் மாட்டி விட்டுச் செல்லும் அபாயமும் பதுங்கியிருப்பதையும் உணர முடியும்.
ஸ்டாலினுக்கு ஆதரவு
சமீபத்தில் சாமி ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து திமுக தலைவர் கருணாநிதி விலகி மு.க.ஸ்டாலினை அந்த இடத்திற்கு அறிவிப்பார் என நான் எதிர்பார்கிறேன். மேலும் பாஜகவும், தேமுதிகவும் இணைந்து திமுகவுடன் கூட்டணி வைக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.
ஏன் இந்த திடீர் ஆதரவு?
2ஜி வழக்கில் திமுகவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் சாமி, இப்படி திடீரென திமுக ஆட்சிக்கு வர என்ன வழி என்று ஆலோசனை கூறியதும், ஸ்டாலினுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததும் பல சந்தேகங்களை எழுப்பியது.
ஆடு நாங்கதான்.. ஆனா பலி நீங்க!
ஆனால் ஆடு வேறு பலி வேறு என்ற புதிய சூழலை உருவாக்க முயற்சிக்கிறார் சாமி என்பதே உண்மை. அதாவது பாஜகவுக்கு ஆதரவாக, தேமுதிகவையும், திமுகவையும் பலிகடாவாக்குவதே அவரது உண்மையான திட்டம்.
பாஜக - அதிமுகவை கோர்த்து விட
திமுக, பாஜக, தேமுதிக சேர வேண்டும் என்று அவர் சொல்வது உண்மையில் இவர்கள் சேர்ந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில்தான். அவரது உண்மையான திட்டம் பாஜக, அதிமுக கூட்டணி அமைய வேண்டும், திமுக - தேமுதிக இணைந்து விடக் கூடாது என்பதே.
வைகோ அணியில் தேமுதிக
எப்படியும் வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில்தான் தேமுதிக சேரும் என்பது உறுதியாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட நிலையில் மறைமுகமாக அதிமுகவை மிரட்டி பாஜக அணிக்கு அதை வருமாறு அழைக்கிறார் சாமி.
ஒரு வேளை சேராமல் போனால்
ஒரு வேளை தேமுதிக, வைகோ கூட்டணிக்குப் போகாமல், திமுக பக்கம் திரும்பினால், பாஜகவை விட்டால் அதிமுகவுக்கு வேறு வழியில்லை என்று காட்ட முனைகிறார் சாமி.
திமுகவை ஆதரிப்பது போல அதிமுகவுக்கு மிரட்டல்
இதை மனதில் வைத்துத்தான், திமுகவுடன் பாஜகவும், தேமுதிகவும் சேர்ந்து விடும். அப்படி நடந்தால் நீங்க மறுபடியும் ஆட்சிக்கு வர முடியாது. எனவே பேசாமல் பாஜகவுடன் கூட்டணிக்கு வாங்க என்று மறைமுகமாக அதிமுகவை மிரட்டியுள்ளார் சாமி.
பாஜகதான் ரெடியா இருக்கே
மறுபக்கம் பாஜக எத்தகைய கூட்டணிக்கும் தயாராகவே இருக்கிறது. திமுக கூட்டணி வந்தால் அதற்கும் ரெடி.. அதிமுக வந்தால் அதற்கும் ரெடி.. தேமுதிக வந்தால் அதற்கும் ரெடி... !
பாஜவுக்கு அதிமுக முக்கியம்
தற்போது மற்ற கட்சிகளை விட பாஜகவுக்கு, அதிமுகதான் முக்கியம். காரணம் அதன் கையில் உள்ள எம்.பிக்கள். அதை வைத்துக் கொண்டுதான் பல சங்கடங்களிலிருந்து தப்ப வேண்டியுள்ளது.
அதிமுகவுக்கு பாஜக முக்கியம்
அதேசமயம், அதிமுகவுக்கும் பாஜக முக்கியம். சொத்துக் குவிப்பு உள்ள வழக்குகளில் சிக்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாஜகவால் அரசியல்ரீதியில் உதவ முடியும் என்ற நம்பிக்கையை சாமி மறைமுகமாக அதிமுக தரப்புக்கு விதைக்கப் பார்க்கிறார். அது நடந்தாலும் நடக்கலாம்.. எதிர்பார்க்கும் பாசிட்டிவ் பார்வை அதிமுக பக்கமிருந்து வந்தால்.
|
இந்த நிலையில் புது டிவீட்
இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு டிவீட் போட்டுள்ளார் சாமி. அதில், கருணாநிதி இல்லாத திமுகவுடன், விஜயகாந்த்தும், பாஜகவும் இணைய வேண்டும் என்று நான் சொன்னால் ஏன் அம்மா ஆதரவாளர்களுக்கு குத்துகிறது, குடைகிறது என்று கேட்டுள்ளார் சாமி. இது சும்மானாச்சுச்சும் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.. அல்லது ஒரு படத்தில் சும்மா உட்கார்ந்திருக்கும் வடிவேலுவை ஒரு பையன் வாடா வாடா என்று தூண்டி விட்டு மடக்கிப் போடும் காட்சி போலவும் எடுத்துக் கொள்ளலாம்.
யார் மாட்டப் போறாங்களோ
நாலா பக்கமும் வலையை விரித்துக் காத்திருக்கிறார் சாமி (பாஜக). இதில் யார் வந்து மாட்டப் போகிறார்களோ.. யாருக்கு அடி அதிகம் கிடைக்கப் போகிறதோ.. பொறுத்திருந்து பார்ப்போம். சாமியைவிட பெரிய சாணக்கியர் கருணாநிதி.. எனவே அவர் நாலு அல்ல நாற்பது வகையான கணக்கையும் போட்டுப் பார்த்திருப்பார் இன்னேரம் என்று நிச்சயமாக நம்பலாம்.