மிரட்டலுக்கு குடிமகன் அஞ்சலாம்; தமிழகத்தின் முதல் மகன் அஞ்சலாமா?.. டி.ஆர் கேள்வி
சசிகலா தரப்பினரின் மிரட்டலுக்கு சாதாரண குடிமகன் அஞ்சலாம், ஆனால் தமிழகத்தின் முதல் மகனான முதல்வர் அஞ்சலாமா? என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: சசிகலா தரப்பினரின் மிரட்டலுக்கு பயந்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக கூறும் ஓ.பன்னீர் செல்வம், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ள போதிலும் அஞ்சுவது சரியா? என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரணமடைந்த பிறகு முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, சட்டசபை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை முன்மொழிந்த ஓ.பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் அனுப்பினார்.
பின்னர் திடீரென ஜெயலலிதாவின் சமாதியில் மௌன புரட்சி நடத்திய ஓ.பன்னீர் செல்வம், தன்னை சசிசலா தரப்பினரும், மூத்த நிர்வாகிகளும் நிர்பந்தப்படுத்தி , கட்டாயப்படுத்தியதாலேயே தாம் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக ஓ.பன்னீர் செல்வம் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், ஓ.பன்னீர் செல்வம் பதவியை ராஜிநாமா செய்த வரை இருந்த 175 நாள்களில் ஜெயலலிதா குறித்து அவர் வாய் திறக்காதது ஏன்?
ரவுடி கும்பலின் மிரட்டலுக்கு சாதாரண குடிமகன் அஞ்சலாம், ஆனால் மாநிலத்தின் முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் பயந்தார் என்று கூறுவது சரியல்ல. அஞ்சினார் என்றால் ஒரு இயக்கத்தின் தலைவராக இருக்க ஆசைப்படலாமா?
இத்தனை நாள்கள் ஓபிஎஸ் அணி என்ன செய்து கொண்டிருந்தது பூனைக்கு மணி கட்டுவது யார்? ஓபிஎஸ்ஸின் திடீர் தியானம் ஏன்? என்று சரமாரியாக கேள்விகளை தொடுத்துள்ளார்.