தமிழக மக்களே, இலவசங்களால் உங்களது பிரச்சினைகள் தீராது.. மாயாவதி அறிவுரை
சென்னை: இலவசப் பொருட்களால் தமிழக மக்களின் எந்தப் பிரச்சினையும் தீராது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று உ.பி. முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி கூறியுள்ளார்.
இதுபோன்ற இலவசங்கள் என்ற மாய வலையில் தமிழக மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும் மாயாவதி கூறியுள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் நேற்று பிரச்சாரம் செய்து பேசினார் மாயாவதி.
அக்கூட்டத்தில் மாயாவதி பேசியதாவது:
பிராந்தியக் கட்சிகள் இலவச செல்போன்கள் உள்ளிட்ட பல இலவசங்களை அறிவித்துள்ளன. ஆனால் இவற்றால் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியாது. உங்களது பிரச்சினைகளை இந்தக் கட்சிகள் தீர்க்காது, தீர்க்கவும் முயலாது.
மக்களுக்குத் தேவை கல்வி, வேலைவாய்ப்புதான், வறுமை ஒழிய வேண்டும். இதற்கு இந்த இலவசப் பொருட்கள் உதவாது. இது மக்களை ஏமாற்றும் தந்திரம். இந்த மாய வலையில் மக்கள் சிக்கி விடக் கூடாது.
இலவசம் தருகிறோம் என்று சொல்லும் கட்சிகளுக்கு ஓட்டுப் போடாதீர்கள். சரியான கட்சிக்கே நீ்ங்கள் வாக்களிக்க வேண்டும். உங்களுக்கு வேலை தருவோருக்கும், உங்களது வறுமையைப் போக்குவோருக்குமே நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
அப்படிப்பட்ட சரியான கட்சி பகுஜன் சமாஜ் கட்சி. உத்தரப் பிரதேசத்தில் நான்கு முறை நான் முதல்வராக இருந்தபோது மக்களுக்காக பல திட்டங்களைக் கொண்டு நிறைவேற்றியுள்ளேன். இது தமிழக மக்கள் உணர வேண்டும்.
நாங்கள் எதையுமே சொல்ல மாட்டோம். செய்வதில் மட்டுமே எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மற்ற கட்சிகள் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்றவே செய்கிறார்கள் என்றார் அவர்.