தொடரும் விபரீதம்: மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்தது- அசம்பாவிதம் தவிர்ப்பு!
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
நாகை: நாகை மாவட்டம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவின் மேற்கூரை இடிந்து விழுந்தது. குழந்தைகள் மற்றும் பெண்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ளது அரசு மருத்துவமனை. இங்கு மகப்பேறு பிரிவும் செயல்பட்டு வருகிறது. இது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த கட்டடத்தின் மேற்கூரை இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. எனினும் அங்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த மாதம் கோவை மாவட்டம் சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். அதேபோல் கடந்த 20-ஆம் தேதி பொறையாறு பஸ் பணிமனை மேற்கூரை இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இதுபோல் அரசு கட்டடங்கள் கட்டப்பட்டு குறுகிய காலத்திலேயே இடிந்து விழுவதிலிருந்து கட்டடம் கட்டப்பட்டதன் தரத்தை கண்டு பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.