பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் ஒரு சீட் கூடகிடைக்காது... மயில்சாமி கடும் பாய்ச்சல்
தமிழகத்தில் பாஜகவுக்கும் சரி, காங்கிரஸுக்கும் சரி ஒரு சீட் கூட கிடைக்காது. அதனால்தான் நமது பிரச்சினைகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை என்று நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதற்கு தேசியக் கட்சிகள்தான் காரணம். இங்கு அவர்களால் தனியாக நின்று ஒரு எம்.எல்.ஏ சீட் கூட வாங்க முடியாது. அந்த கோபத்தில்தான் நமக்கு சாதகமாக நடக்காமல் உள்ளனர் என்று நடிகர் மயில்சாமி கடுமையாக சாடியுள்ளார்.
நியூஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு மயில்சாமி தனது கருத்துக்களை முன்வைத்தார். இது எனது கருத்து அல்ல, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கருத்து. அதை நான் பிரதிபலிக்கிறேன் என்று கூறி அவர் தெரிவித்த கருத்துக்கள்:
எனக்கு பீட்டா என்றால் என்ன என்று தெரியாது. அப்படி ஒரு அமைப்பு இருக்கான்னு கூட தெரியாது. அது எதற்கு என்று கூட தெரியாது. ஆனால் எனக்கு ஜல்லிக்கட்டுன்னா என்ன என்று தெரியும். நினைவு தெரிந்த நாளில் இருந்தே எனக்குத் தெரியும்.
தமிழர்கள் சட்டத்தை மதிப்பவர்கள். நீ ஒரு மாதம் குளிக்காதே என்று கோர்ட் சொன்னால் குளிக்காமல் இருப்பான். திருடாதே என்றால் திருடாமல் இருப்பான். ஜல்லிக்கட்டு நடத்தாதே என்று 2 முறை சொன்னார்கள். 2 முறையும் நடத்தாமல் இருந்தான். ஆனால் இந்த முறை சொல்லிப் பாருங்கள். நடத்தாமல் விட மாட்டான். கேட்க மாட்டான்.
நமக்கும் கோர்ட்டுக்கும், கட்சிகளுக்கும், ஆட்சிக்கும் இடையே சண்டையெல்லாம் கிடையாது. இது நம்மோட கலாச்சாரம், என்னோட கலாச்சாரம். எல்லோரையும் கொஞ்சுறீங்களே நீங்க. ஆந்திராவைக் கொஞ்சுறீங்க, கேரளாவைக் கொஞ்சறீங்க, கர்நாடகத்தைக் கொஞ்சுறீங்க. தமிழ்நாட்டை மட்டும் ஏன் கெஞ்ச வைக்கிறீங்க.
தேசியக் கட்சிகளுக்கு இங்கு இடம் கிடையாது. தனியா நின்னு ஒரு சீட்டில் கூட ஜெயிக்க முடியாது. ஒரு எம்.எல்.ஏ கூட கிடைக்காது. திமுகவோ அல்லது அதிகமுவோ யாராவது ஒருவர் மீது சவாரி செய்ததான் போக வேண்டும். இதுதான் உள்நோக்கம். இந்த உள்நோக்கத்தால்தான் தடை செய்றாங்க. தனியா ஒதுக்கி வச்சுட்டாங்க.
நாம் எந்த கோரிக்கை வைத்தாலும் பார்ப்போம், பரிசீலிப்போம், யோசிப்போம் என்று சொல்வது, ஆனால் கேரளாவோ, கர்நாடகவோ, ஆந்திராவோ கேட்டால் அன்னிக்கே தீர்வு. என்ன இது என்று ஆவேசமாக கேட்டார் மயில்சாமி.