மாநகராட்சி மேயரை தேர்வு செய்யும் புதிய சட்டதிருத்தம்: தமிழக அரசிதழில் வெளியீடு
சென்னை: மாநகராட்சி மேயரை மாமன்ற உறுப்பினர்களே ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பதற்கான சட்டத்திருத்தம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, வேலூர், தஞ்சை, திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. மாநகராட்சி மேயர்களை மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுக்கும் முறை நடைமுறையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் இந்த முறையை மாற்றி மாநகராட்சி கவுன்சிலர்கள் ஓட்டு அளித்து மேயரை தேர்ந்தெடுப்பதற்கான புதிய சட்டத்திருத்த மசோதா கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய சட்ட திருத்த மசோதாவிற்கு 132 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தன. இதற்கு 88 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சட்டப்பேரவையில் மாநகராட்சி மேயரை தேர்வு செய்யும் புதிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ரோசய்யா சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து அந்த சட்டத்திருத்தம் குறித்த அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியானது. இந்த சட்டத்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.