மே 9 முதல் எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள் விநியோகம் - மருத்துக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வருகின்ற மே 9 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவற்றில் மாணவர்களை சேர்க்க விண்ணப்ப படிவங்கள் மே 9 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் விமலா, "தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 265 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக மீதம் 2257 சீட்டுகள் இருக்கின்றன.
மொத்த காலியிடங்கள்:
8 தனியார் மருத்துவ கல்லூரிகள் மூலம் 595 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசுக்கு கிடைக்கின்றன. கே.கே.நகர் ஈ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் உள்ள 100 இடங்களில் 65 இடங்கள் அரசு ஒதுக்கீடாகும். ஆக மொத்தம் 2917 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
அரசு இட ஒதுக்கீடு:
இது போல சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் உள்ள 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு 15 போக 85 இடங்களும், 17 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 970 இவற்றை சேர்த்து மொத்தம் 1055 இடங்கள் இருக்கின்றன.
மே 9 முதல்:
எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை படிவம் வழங்கப்படும். ரூபாய் 500 க்கான டி.டி. செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். www.tnhealth.org மருத்துவ வெப் சைட்டிலும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
கலந்தாய்வு பட்டியல்:
27 ஆம் தேதி மாலை 5 மணிவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் அவற்றை ஆய்வு செய்து ஜூன் 15 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதனை தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் மாதமும் 2 ஆவது கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு மாதமும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.