ராணிப்பேட்டையில் 10 பலியான விபத்து: தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய இயக்குனர்கள் மூவர் கைது
வேலூர்: ராணிப்பேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் பலியான வழக்கு தொடர்பாக தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் உட்பட 3 பேரை சிபிசிஐடி போலீசார் நேற்றிரவு கைதுசெய்தனர்.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட்டில் தோல் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம் (பேஸ்-1) உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் அந்த பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர்கள் கொண்டு வரப்பட்டு சேகரிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் பொது சுத்திகரிப்பு நிலைய கழிவுநீர் தொட்டியின் ஒரு பகுதி சுவர் திடீரென இடிந்தது. இதனையடுத்து ரசயானக்கழிவுகள் வெள்ளம் போல் பாய்ந்து சென்றன.
இதில் தனியார் தொழிற்சாலையில் தூங்கி கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் கழிவுநீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் வேலூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் காமராஜ் உள்பட 3 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
வெள்ளிக்கிழமையன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால், போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்க 5 தனிப்படை குழு அடைக்கப்பட்டது.
இயக்குநர்கள் தலைமறைவு
இந்நிலையில் விபத்து நடந்த தொழிற்சாலைகளின் நிர்வாகிகள் சென்னையில் பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்பி நாகஜோதி தலைமையில் போலீசார் சென்னை சென்று அங்கு பதுங்கி இருந்த மேலாண்மை இயக்குனர் உட்பட 7 பேரை மடக்கி பிடித்து ராணிபேட்டைக்கு அழைத்து வந்தனர்.
எஸ்.பி.விசாரணை
எஸ்பி நாகஜோதி மற்றும் போலீசார் பொது தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர்களிடமிருந்து சில ஆவணங்களை மீட்டனர்.
தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் அமிர்தகடேசன், இயக்குனர்கள் ரகுநாதன், மணி, ரகுபதி, ஜெயச்சந்திரன், சுப்பிரமணி, சொக்கலிங்கம் பிள்ளை ஆகிய 7 பேரையும் தனித்தனியாக அறையில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மூன்று பேர் கைது
நேற்றிரவு 8.45 மணியளவில் மேலாண்மை இயக்குனர் அமிர்தகடேசன் மற்றும் இயக்குனர்கள் ஜெய ச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.
நால்வரிடம் விசாரணை
மேலும் இயக்குனர்கள் ரகுநாதன், காந்தஜோதி, ரகுபதி, எஸ்.சி.பிள்ளை ஆகிய 4 பேரிடம் இரவு முழுவதும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.