மதேமுதிக ஹீரோ... மநகூ ஜீரோ... சேலத்தில் பேசிய ஸ்டாலின்: ரிலையன்ஸ் பெயரை சொல்லாதது ஏன்?
சென்னை: அதிமுகவின் பி அணியாக செயல்பட்ட மக்கள் நலக்கூட்டணி ஜீரோவாகிவிட்ட நிலையில், திமுகவில் இணைந்தததன் மூலம் மக்கள் தேமுதிக ஹீரோவாகிவிட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று செயல்பட்டவர்கள் பற்றி பேசி தாம் தரம்தாழ்ந்துபோக விரும்பவில்லை என்றும அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக தேர்தலைச் சந்தித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திமுக-வுடன் கூட்டணி சேர வலியுறுத்தியும் அக்கட்சியின் அப்போதைய எம்எல்ஏக்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் தலைமையில் மக்கள் தேமுதிக என்ற கட்சி தொடங்கப்பட்டது.
சட்டசபை தேர்தலில் 3 தொகுதிகள் மக்கள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டது. உதயசூரியன் கட்சியில் போட்டியிட்ட 3 மதேமுதிக வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். தனியாக கடை போட்டால் வியாபாரம் செய்வது சிரமம் என்று கருதிய மக்கள் தேமுதிக நிர்வாகிகள் சந்திரகுமார் தலைமையில் திமுக தலைவர் கருணாநிதியை கடந்த மாதம் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், மக்கள் தேமுதிகவை திமுக உடன் இணைக்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து இதற்கான இணைப்பு விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் ஞாயிறு இரவு நடந்தது.
மக்கள் தேமுதிகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், பி.எச்.சேகர் ஆகியோர் இக்கூட்டத்துக்கு முன்னிலை வகித்தனர். விழாவில் பேசிய எஸ்.ஆர்.பார்த்திபன் தன்னுடைய சொந்த நலனுக்காக விஜயகாந்த் தேமுதிக-வை அழித்துவிட்டார். இந்தத் துரோகத்தை மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என்றார்.
விழாவில் பேசிய ஸ்டாலின், திமுக-வுடன், மக்கள் தேமுதிக இணைந்துள்ளது, திமுகவின் கரத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மக்கள் தேமுதிக ஏன் உருவானது என்பதை ஏற்கெனவே விளக்கமாக பேசிவிட்டனர்.
திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தவர்கள் பற்றிக் கவலைப்படவில்லை. அதற்கு யார் காரணம் என்பது பற்றி பேசி அவர்களுக்கு விளம்பரம் தேடி தரவில்லை.
கடந்த ஐந்தாண்டில் தமிழகம் 20 முதல் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் ஆளும்கட்சிக்கு ஒரே எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. பேரவையில் திமுக தலைவர் மு.கருணாநிதி பற்றி ஆளும்கட்சியினர் தரக் குறைவாகப் பேசி வருகின்றனர். இதற்கு பதில் அளித்துப் பேச அனுமதி மறுப்பதால், வெளிநடப்பு செய்து வருகிறோம். இனிமேல் எதுவாக இருந்தாலும் பிரச்னையைப் பற்றி பேசாமல் வெளிநடப்பு செய்ய மாட்டோம்.
விஷ்ணுப்பிரியா மரணம் விவகாரத்திலும், ரூபாய் 570 கோடி கண்டெய்னர் விவகாரத்திலும் மாநில அரசு மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது. இதைவிட வெட்கக்கேடு எதுவும் இல்லை. கண்டெய்னர் விவகாரம் குறித்து விரைவில் உண்மைகள் வெளிவரும்.
மாணவர் லெனின் கல்விக்கடனைக் கட்டச் சொல்லி தேசிய வங்கியுடன் காண்ட்ராக்ட் பெற்றுள்ள ஒரு தனியார் நிறுவனம் கொடுத்த அழுத்தத்தால் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பதில் என்ன? ஆட்சிக்கு வந்தும் இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. கடந்த ஆட்சியில் அறிவித்த அறிவிப்புகள் எல்லாம் ஊறுகாய் பாட்டிலில் ஊறிக் கொண்டிருக்கின்றன என்றார்.
கல்விக்கடன் நிர்பந்தத்தால் தற்கொலை செய்துகொண்ட லெனின் விவகாரம் குறித்து பேசிய ஸ்டாலின், எந்த இடத்திலும் கடனை வசூலிக்க உரிமம் பெற்றுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரை உச்சரிக்கவேயில்லை. தனியார் நிறுவனம் என்று மட்டுமே பயன்படுத்தினார். அது ஏன் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.