நீட் விலக்கு... டாஸ்மாக் மூட வலியுறுத்தி தஞ்சை மதிமுக மாநாட்டில் தீர்மானம்
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காவிட்டால் வரலாறு காணாத போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகும் என்று மதிமுகவின் தஞ்சாவூர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டைச் சுற்றிவளைப்பதற்கு ஒருபோதும் இடம் அளிக்கக் கூடாது என்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கின்றது என்று தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகின் உயர்ந்தோங்கிய மக்கள் ஆட்சி நாடாகத் திகழும் இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பது, வேற்றுமையில் ஒற்றுமையும், நாட்டின் பன்முகத் தன்மையும்தான் என்பதை மறுக்க முடியாது.
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே நாடு எனும் இந்துத்துவக் கருத்தியலை நடைமுறைப்படுத்தும் வகையில்தான், கடந்த மூன்று ஆண்டுக் கால மோடி ஆட்சியின் செயல்பாடுகள் இருக்கின்றன.
இந்துத்துவ சக்திகளின் பிடியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் சிக்கியுள்ளதைப் போன்று தமிழ்நாட்டையும் ஆதிக்கம் செலுத்த துடிக்கின்றன.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
திராவிட இயக்கம் போராடிப் பெற்றுத் தந்த சமூக நீதி உரிமையைத் தட்டிப் பறிக்கும் வகையில் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. மருத்துவக் கல்வி பயில்வதற்கு தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (NEET) கட்டாயமாக்கப்பட்டு இருப்பது அநீதி ஆகும்.
நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2017 பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
கல்வியில் தன்னாட்சி
மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து கல்வித் துறையைக் காவிமயமாக்கித் தனியாருக்குத் தாரை வார்த்து ஏகபோக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் மத்திய அரசிடம் இருந்து கல்வித் துறையை முழுமையாக மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அப்போதுதான் கல்வித் துறையில் மாநிலங்கள் தன்னாட்சியுடன் செயல்பட முடியும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
காவிரி நடுவர் மன்றம்
தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரி மரபு உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைத்திட உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தஞ்சைத் தரணியில் நடைபெறும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு வலியுறுத்துகின்றது.
அணை கட்ட எதிர்ப்பு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு, இராசிமணலில் தடுப்பு அணைகள் கட்டும் திட்டத்திற்கு 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக மாநில அரசு, தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி அணைகள் கட்டும் பணியில் இறங்குவோம் என்று அறிவித்துள்ளது. தமிழக அரசு காவிரிப் பிரச்சினையில் மிகவும் கவனமாக நமது தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என்றும், கர்நாடகம் காவிரியின் குறுக்கே எக்காரணம் கொண்டும் அணைகள் கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
கதிராமங்கலம்
நெடுவாசல், கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்யக் கோரி பொது மக்கள் கடந்த 5 மாத காலமாகத் தொடர்ச்சியாகப் போராட்டக் களத்தில் இறங்கி உள்ளனர். வளம் கொழிக்கும் காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாலைவனமாக மாற்றும் இத்தகைய திட்டங்களை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுமாறு கோரிக்கை வைத்து பொது மக்கள் குறிப்பாகப் பெண்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க. அரசு உடனடியாக மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிந்து ஓராண்டு காலம் ஆகப் போகும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு இழுத்தடிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது ஆகும்.
எனவே, சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டவாறு உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.
கீழடி அகழ்வாராய்சி
- மத்திய கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வலியுறுத்தியவாறு கீழடி தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சி தொய்வின்றித் தொடர வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
மீனவர்கள் விடுதலை
இலங்கைச் சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்வதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திரும்பப் பெறுவதுடன் அதற்குரிய நட்ட ஈட்டுத் தொகையையும் இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும்.
இந்திய அரசு ரோஹிங்கிய முஸ்லிம்களை மியான்மருக்குத் திருப்பி அனுப்பும் முடிவைக் கைவிட்டு, மனித நேயத்துடன் அம்மக்களுக்கு அகதிகளுக்கான உதவிகளை அளிக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
கூடங்குளம் அணுஉலை
கூடன்குளத்தில் ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகளும் முழு அளவில் மின் உற்பத்தியில் ஈடுபடவில்லை.
கூடன்குளத்தில் மூன்று, நான்கு மற்றும் ஐந்து, ஆறு என தொடர்ச்சியாக அணு உலைகளை அமைக்க ரஷ்ய நாட்டுடன் மோடி அரசு ஒப்பந்தம் போடுவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், கூடன்குளம் அணு உலைகளை மூட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகின்றது.