நியூட்ரினோவிற்கு எதிராக தீக்குளித்த ரவி கவலைக்கிடம்... வைகோ நேரில் சந்திப்பு!
மதுரையில் தீக்குளித்த மதிமுக தொண்டர் ரவி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அவரை வைகோ நேரில் சந்தித்தார்.
Recommended Video
மதுரை: நியூட்ரினோ எதிர்ப்பு பேரணியின் போது தீக்குளித்த மதிமுக தொண்டர் ரவி கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் அவரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்தார்.
மதுரையில் இருந்து கம்பத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 நாட்கள் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இதற்காக மதுரையில் இன்று நடைபெற்ற தொடக்க விழா கூட்டத்தின் போது திடீரென மேடைக்கு அருகில் இருந்த தொண்டர் ஒருவர் தீக்குளித்தார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக முழக்கமெழுப்பியவாறு தனது உடலில் அந்தத் தொண்டர் தீ வைத்துக் கொண்டார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த 42 வயது ரவி மதிமுக இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார். யாரும் எதிர்பாராத நேரத்தில் இவர் தனது உடலில் தீ வைத்துக் கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. மேடையிலிருந்த வைகோ உடனடியாக ஓடி வந்து ரவியின் நிலையைக் கண்டு கதறி அழுதார்.
90 சதவிகிதத்திற்கும் மேல் உடம்பில் தீ பரவி, மிக ஆபத்தான நிலையில் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படும்போதும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ரவி முழக்கமெழுப்பினார்.
இயற்கை இடர்பாடுகள் இருந்தாலும் என்னுடைய பேரணியை தொடர்வதாக வைகோ கூறிவிட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கினார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவரை வைகோ நேரில் சந்தித்தார். இதனிடையே தீக்குளித்த ரவியிடம் விரைவு நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றுள்ளார்.