நியூட்ரினோ: தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி உயிரிழப்பு - வைகோ வேதனை
நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார்.
Recommended Video
மதுரை: நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என கோரி மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடைப்பயணத்தில் தீக்குளித்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று பலியானார். இவரது உயிரிழப்பு வேதனை அளிப்பதாக வைகோ தெரிவித்தார்.
தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 நாள் விழிப்புணர்வு நடைபயணத்தை சனிக்கிழமை துவக்கினார்.
அப்போது மதுரையில் நடந்த கூட்டத்தில் வைகோ மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட இளைஞர் துணை அமைப்பாளர் ரவி பேசுவார் என்று மேடையில் அறிவிக்கப்பட்டது.
அச்சமயம் நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரவி தனது உடலில் தீவைத்து கொண்டார். இதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் 99 சதவீத தீக்காயங்களுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி ரவி இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். அந்த தொண்டர் காப்பாற்றப்பட வேண்டும் என்று வைகோ கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.
ரவியின் உயிரிழப்பு குறித்து உசிலம்பட்டியில் நடைபயணம் மேற்கொண்ட வைகோ கூறுகையில் , தம்பி ரவி உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. மதுரைக்கு சென்று ரவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பிறகு நடைப்பயணத்தை மேற்கொள்வேன் என்றார் வைகோ.