ஜாம்பவான்களும், கோடீஸ்வரர்களும், திடீர் வேட்பாளரும்.. மதிமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
சென்னை: 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது மதிமுக. அதன் பொதுச் செயலாளர் வைகோ, கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென பின்வாங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மதிமுகவின் 29 வேட்பாளர்கள் குறித்த பயோடேட்டா:
கோவில்பட்டி:
விநாயகரா ரமேஷ் போட்டியிடுகிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுவதாக இருந்த நிலையில் திடீரென ரமேஷ் வேட்பாளராகி விட்டார். 48 வயதான இவர் கோடீஸ்வரர், தொழிலதிபர்.
திருப்போரூர்:
மல்லை சத்யா. வைகோவின் வலது கரமாக திகழ்பவர். மதிமுக மாநில துணைப் பொதுச் செயாளராக இருக்கிறார். மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர். மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவராக 1996ல் செயல்பட்டுள்ளார்.
காரைக்குடி -
செவந்தியப்பன். மதிமுகவின் சீனியர் லீடர்களில் ஒருவர் புலவர் செவந்தியப்பன். மதிமுக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருக்கிறார். சிவகங்கையைச் சேர்ந்தவர். தோல்விகளை மட்டுமே பார்த்தவர் இவர். 1991ல் திருப்பத்தூரில் தோற்றார். பின் 1996, 2001 தேர்தல்களிலும் தோற்றார். 2006ல் சிவகங்கையில் தோற்றார். 2011 தேர்தலிலும் அவர் திருப்பத்தூரில் தோற்றார். தற்போது காரைக்குடிக்கு மாறியுள்ளார்.
ஆலங்குடி:
மருத்துவர் சந்திரசேகரன். கால்நடை மருத்துவரான சந்திரசேகரன் ஆலங்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது சொந்த ஊர் மறமடக்கி. புதுக்கோட்டையில் காஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். மதிமுக மாவட்ட செயலாளர், மாநில உயர்நிலைக் குழு உறுப்பினராக உள்ளார். கடந்த 1989ல் இவர் திமுக அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். மதிமுகவின் சீனியர் தலைவர்களில் ஒருவர்.
செஞ்சி:
ஏ.கே. மணி. பாமகவுக்கு ஏ.கே. மூர்த்தி போல மதிமுகவுக்கு ஏ.கே.மணி. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர். விழுப்புரம் வடக்கு மாவட்ட மதிமுக செயலாளராக இருக்கிறார்.
சங்கரன்கோயில்:
சதன் திருமலைக்குமார் 59 வயதாகும் மருத்துவரான சதன் திருமலைக்குமாரின் சொந்த ஊர் சிங்கிலிப்பட்டி. அவரது தந்தை திருமலையாண்டி, தாய் ஆவுடையம்மாள். அவரது மனைவி குமாரி சந்திரகாந்தமும் ஒரு மருத்துவர். 1991ம் ஆண்டு தென்காசியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்றார். தொடர்ந்து 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியிலும், 2001ல் சங்கரன்கோவிலிலும் மதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து 2006ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தபோது வாசுதேவநல்லூரில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக உள்ளார்.
குளச்சல்:
சம்பத் சந்திரா. புதுமுக வேட்பாளர். மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்து வந்தார் சம்பத் சந்திரா. இவருக்கு இது 2வது தேர்தல். ஏற்கனவே இதே குளச்சலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர் சம்பத் சந்திரா.
திருச்சி மேற்கு:
ரொகையா. பெண் மருத்துவர் ரொகையா. மாநில மதிமுக மகளிர் அணிச் செயலாளராக இருந்து வருகிறார். மணப்பாறை தொகுதியில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வசித்து வரும் திருச்சியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
அண்ணாநகர்:
மல்லிகா தயாளன். சென்னை தி.நகரில் வசித்து வருகிறார் மல்லிகா தயாளன். மாநில மகளிர் அணி துணைச் செயலாளராக இருக்கிறார். அண்ணா நகரில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி:
பேராசிரியை பாத்திமா பாபு. மதிமுகவில் அரசியல் ஆய்வு மைய உறுப்பினராக உள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்தவர். 20 ஆண்டு கால கல்லூரி வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றவர். சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2011 தேர்தலில் மதிமுக சார்பில் மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மீனவ சமூதாயத்தை் சேர்ந்தவர்.
மதுரை தெற்கு:
புதூர் பூமிநாதன். மதுரை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளராக இருக்கிறார் பூமிநாதன். வைகோவின் அன்பைப் பெற்றவர். தீவிர உழைப்பாளி. ஆரம்ப காலத்திலிருந்து மதிமுகவில் இருப்பவர்.
ஆற்காடு:
பி.என். உதயகுமார். தியேட்டர் உரிமையாளர், சினிமா விநியோகஸ்தர் என சினிமாத் துறையில் சீரியஸாக ஈடுபட்டிருப்பவர் உதயக்குமார். 2004ம் ஆண்டு முதல் வேலூர் கிழக்கு மாவட்ட மதிமுக செயலாளராகவும் இருக்கிறார். ஆற்காடு நகர கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.
ஆயிரம் விளக்கு:
அமைச்சர் பா. வளர்மதியை எதிர்த்து மதிமுக சார்பில் ரெட்சன் அம்பிகாபதி போட்டியிடுகிறார். இவர் மத்திய சென்னை மாவட்ட மதிமுக பொறுப்பாளராக இருக்கிறார். வசிப்பது நுங்கம்பாக்கத்தில்.
கிணத்துக்கடவு:
வே.ஈஸ்வரன். கோவை, சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் வே.ஈஸ்வரன் பொறியியல் பட்டதாரி. சுந்தராபுரத்தில் சொந்தமாக வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை மையத்தை நடத்தி வருகிறார். மதிமுக உருவான 1994-ஆம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கட்சியின் மாவட்டப் பொறியாளர் அணி, துணை அமைப்பாளர், மதுக்கரை ஒன்றியச் செயலாளர், கோவை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். தற்போது, கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
நாகர்கோவில்:
கிறிஸ்டின்ராணி செல்வின். ஆசிரியையாக பணியாற்றியவர். 1972ல் திமுகவில் இணைந்து செயல்பட்டார். மதிமுக உருவானபோது இவரும் அதில் இணைந்தார். மாநில மகளிர் அணி துணைச் செயலாளராக இருக்கிறார். 1986ல் நாகர்கோவ் நகராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1996ல் மீண்டும் போட்டியிட்டார். அப்போது திமுக சார்பில் போட்டியிட்ட தனது தங்கை ஜெமீலாவிடம் தோல்வி அடைந்தார்.
பாளையங்கோட்டை:
நிஜாம் முகைதீன். பாளையங்கோட்டையில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழ்மகன் உசேனுக்கு பொன்னாடை போர்த்தி அவரது வேட்பாளர் பதவியைக் காலி செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நிஜாம். நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். மேலப்பாளையம் முஸ்லீம் வாக்குகளை அதிகம் நம்பி களம் கண்டுள்ளார்.
உசிலம்பட்டி:
பாஸ்கர சேதுபதி. முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர். 2011ல் நடந்த மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர். முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களம் காண்கிறார்.
சாத்தூர்:
ஏ.ஆர்.ஆர். ரகுராமன். 44 வயதாகும் ரகுராமன், ஒரு டாக்டர் ஆவார். இவரது மனைவி லதாவும் டாக்டர். சொந்த ஊர் ஆலங்குளம். மதிமுகவில் மாநில மருத்துவர் அணிச் செயலாளராக இருக்கிறார்.
ஆவடி:
ஆவடி தொகுதியில் அந்திரிதாஸ் போட்டியிடுகிறார். மதிமுக மாநில தீர்மானக் குழுச் செயலாளராக இருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத் துணைச் செயலாளராகவும் இருக்கிறார். ஆவடி டாங்கி தயாரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். அதேபோல டிஐ டயமன்ட் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவராகவும் இருக்கிறார்.
துறைமுகம்:
துறைமுகம் தொகுதியில் முராத் புகாரி போட்டியிடுகிறார். புகாரி குழுமத்தைச் சேர்ந்தவர். மதிமுக மாநில சிறுபான்மையினர் பிரிவு செயலாளராக இருக்கிறார்.
பூந்தமல்லி:
கந்தன். பூந்தமல்லி நகராட்சியின் 14வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார் கந்தன். பூந்தமல்லி மக்களின் பிரச்சினைகளுக்காக அயராமல் போராடி வருபவர். தொகுதியில் அறிமுகமான முகம். மதிமுகவின் ஆரம்ப கால உறுப்பினர்.
ஈரோடு மேற்கு:
நா.முருகன். 57 வயதான முருகன் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர். துணி பதனிடும் ஆலையை நடத்தி வருகிறார். 1996 முதல் மதிமுகவின் ஈரோடு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.
ஜெயங்கொண்டம்:
கந்தசாமி. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்தவர் கந்தசாமி. 29வது வார்டு மாவட்டக் கவுன்சிலராக இருந்தார். ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவதற்காக கவுன்சிலர் பதவியை உதறி விட்டார்.
முதுகுளத்தூர்:
பொ. ராஜ்குமார். ராமநாதபுரம் மாவட்டம் கருமல் கிராமத்தைச் சேர்ந்தவர். வசிப்பது பரமக்குடி. தேவேந்திர குல வேளாளர். சமீபத்தில்தான் மதிமுகவில் இணைந்தார்.
பல்லடம்:
க. முத்துரத்தினம். 45 வயதான முத்துரத்தினத்தின் தந்தை பெ. கந்தசாமி, பொங்கலூர் ஒன்றிய திமுக செயலாளராக இருந்தவர். முத்துரத்தினம், திருப்பூர் மாவட்ட மதிமுக துணைச் செயலாளராகவும், மாதப்பூர் ஊராட்சித் தலைவராகவும், தமிழ்நாடு மாநில ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். கொங்கு வேளாளக் கவுண்டர்.
அரவக்குறிச்சி:
கோ. கலையரசன். அரவக்குறிச்சி பகுதியில் வித்தியாசமான முறையில் அரசியல் செய்து மக்களினின் கவனத்தை ஈர்ப்பதில் கில்லாடி கலையரசன். கடந்த 2015ம் ஆண்டு இவர் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி, ரூ. 18,000க்கு மது வாங்கி அதை நடு ரோட்டில் போட்டு எரித்து போராட்டம் நடத்தி பரபரப்பைக் கிளப்பினார். கரூர், மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக செயலாளராக இருக்கிறார்.
சிங்காநல்லூர்:
அர்ஜூன ராஜ். கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் போட்டியிடும் வேட்பாளர் அர்ஜூன ராஜ் ஆடிட்டர் ஆவார். மாணவர்கள், இளைஞர்களைக் குறி வைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.
தாராபுரம் :
நாகை. திருவள்ளுவன். வழக்கறிஞரான இவர் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் ஆவார். மதிமுக கூட்டணியில் இணைந்து மதிமுக சின்னத்தில் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பல்லாவரம்:
கி. வீரலட்சுமி. தமிழர் முன்னேற்றப்படை என்ற கட்சியின் தலைவரான இவர் மதிமுக கூட்டணியில் இணைந்து பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.