53 நாட்கள் சிறைவாசம் முடிவடைகிறது... வைகோவுக்கு ஜாமீன் கொடுத்தது கோர்ட்!
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புழல் சிறையில் இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஜாமீன் அளித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த2009ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். இதனையடுத்து வைகோவின் இந்த பேச்சு நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பல வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஏப்ரல்.3ஆம் தேதி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வைகோ நேரில் ஆஜரானார். இதன் பின்னர், நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
3 முறை அவரை ஜாமினில் வெளியே செல்கிறீர்களா என்று நீதிபதி கேட்ட போதும் மறுத்த வைகோ, நேற்று திடீரென ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததால் அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.